அதிக காற்று மாசு
டெல்லியில் காற்றின் தரம் தீபாவளிக்கு அடுத்த சில நாட்களில் 350க்கும் மேலே சென்றது. தர அளவீட்டின் படி 300க்கு மேல் இருந்தால் அது மிக மோசமாக காற்று மாசாகவும், 400க்கும் மேல் இருந்தால் அது உச்சகட்ட அபாய அளவாகவும் கருதப்படும்.
போட்டி நடத்த வேண்டாம்
மிக மோசமான நிலையில் இருந்த காற்று மாசை சுட்டிக் கட்டி சமூக ஆர்வலர்கள் பலர் டெல்லியில் இந்த மோசமான நேரத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
பிசிசிஐ பிடிவாதம்
ஆனால், ஏற்கனவே பல்வேறு திட்டங்களை செய்து விட்ட பிசிசிஐ, கடைசி நேரத்தில் போட்டியை வேறு ஊருக்கு மாற்ற முடியாத சிக்கலில் இருந்தது. அதனால், டெல்லியில் தான் போட்டி நடக்கும், தீபாவளிக்கு பின் ஒரு வாரம் கழித்து போட்டி நடப்பதால் காற்று மாசு அளவு குறையும் என்றார்கள்.
வீரர்கள் பயிற்சி
இதற்கிடையே, இந்தியா மற்றும் வங்கதேச அணி வீரர்கள் டெல்லியில் பயிற்சி மேற்கொள்ள துவங்கினர். முதல் நாள் பயிற்சியில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் மட்டும் முகமூடி அணிந்து இருந்தார்.
உச்சகட்டத்தை எட்டிய மாசு
தற்போது எதிர்பார்ப்பிற்கு மாறாக காற்றின் தரம் மேலும் குறைந்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் காற்றின் தர அளவீடு 459 ஆக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முகமூடி அணிந்து பயிற்சி
இந்த நிலையில், வங்கதேச வீரர்கள் பலரும் முகமூடி அணிந்தே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தங்கள் கிரிக்கெட் போர்டிடம் கூறி இருக்கின்றனர் வங்கதேச வீரர்கள்.
பயிற்சியாளர் சமாளிப்பு
இது பற்றி வங்கதேச அணியின் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது அவர் காற்று மாசு குறித்து நேரடியாக புகார் கூறாமல் சுற்றி வளைத்து மழுப்பினார். எனினும், அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.
நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது
அவர் கூறுகையில், "இது சிறப்பாக இல்லை, ஆனால், நாங்கள் இது குறித்து ஒன்றும் செய்ய முடியாது. இது இப்படி தான் இருக்கும். நாங்கள் போட்டிக்கு தயாராக இருப்பதையும், இதை சமாளிப்பதையும் உறுதிப்படுத்தி வருகிறோம்" என்றார்.
கண் எரிச்சல் இருக்கிறது
"நிச்சயமாக எங்களில் சிலருக்கு கண் எரிச்சல் இருக்கிறது. சிலருக்கு தொண்டை வறண்டு போய் இருக்கிறது. ஆனால், யாருக்கும் கடும் உடல் உபாதையோ, உயிர் போகும் நிலையோ ஏற்படவில்லை" என்று கூறி கடும் அதிர்ச்சி அளித்தார் டொமிங்கோ.
வங்கதேசமும் இப்படி தான்
கடந்த முறை இலங்கை அணி சிரமத்துக்கு உள்ளானது என்பது தெரியும். வங்கதேசத்திலும் காற்று மாசுபாடு உள்ளது. அதனால், இது பெரும் அதிர்ச்சி சம்பவமாக இல்லை என்று கூறி சமாளித்து முடித்தார் வங்கதேச பயிற்சியாளர்.