டெஸ்ட் தொடர்
இந்தியா - வங்கதேசம் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் துவங்கியது. பலமான இந்திய அணியை, வங்கதேசம் வீழ்த்துமா? என்பதே போட்டியின் முக்கிய விஷயமாக இருந்தது.
இந்தூர் ஆடுகளம்
இந்தப் போட்டி நடைபெறும் இந்தூர் ஆடுகளம் முதல் சில நாட்கள் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், பந்துவீச்சாளர்களுக்கும் போதிய சாதகமான சூழல் போட்டியின் இடையே ஏற்படும்.
என்ன நடக்கும்?
முதல் நாளின் முதல் சில மணி நேரங்கள் பந்து பெரிய அளவில் ஸ்விங் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. அது வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கும். பின்னர், ஆடுகளம் முதல் இரண்டு - மூன்று நாட்களுக்கு பேட்டிங் செய்ய சாதகமாகவே இருக்கும்.
கடைசி இன்னிங்க்ஸ்
கடைசி இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்யும் அணிக்கு பெரிய சவால் காத்திருக்கிறது. அப்போது ஆடுகளம், மந்தமாக மாறி விடும் என்பதால் விக்கெட்கள் விரைவாக வீழும். சுழற் பந்துவீச்சாளர்களுக்கும், ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வீச எளிதாக அமையும்.
வங்கதேசம் டாஸ் வெற்றி
அதனால், டாஸ் வெல்லும் அணி நிச்சயம் பேட்டிங் தான் தேர்வு செய்யும் என்பதே பொதுவான கணிப்பாக இருந்தது. அதே போல, வங்கதேசம் டாஸ் வென்றவுடன், பேட்டிங் தேர்வு செய்தது.
வங்கதேச கேப்டன் முடிவு
வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் கூறுகையில், ஆடுகளம் தற்போது கடினமாக இருப்பதால் முதலில் பேட்டிங் செய்வதாகவும், நான்காம் இன்னிங்க்ஸில் ஆடுகளத்தில் அதிக விரிசல் ஏற்படும் என்பதை குறிப்பிட்டார்.
கோலி என்ன சொன்னார்?
கோலி கூறுகையில், இரண்டாம் நாளில் இருந்து பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால், தாங்களும் முதலில் பந்து வீசவே நினைத்தோம் என்றார். ஆனால், நான்காம் இன்னிங்க்ஸ் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
புள்ளி விவரம் சொல்வது என்ன?
இதில் முக்கியமாக ஒரு புள்ளி விவரம் இந்திய அணியை பயமுறுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தியா முதலில் பந்துவீசிய கடைசி ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஆறு தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் வெற்றி
அந்த புள்ளி விவரம் இந்திய அணிக்கு பாதகமாக இருந்தாலும், இந்தியா சந்தித்த ஆறு தோல்விகளும் வெளிநாடுகளில் கிடைத்தவை. அந்த ஒரே ஒரு வெற்றி இந்தியாவில் கிடைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வெல்லும்
டாஸ், ஆடுகளம் ஆகியவை இந்திய அணிக்கு பாதகமாக இருந்தாலும், வீரர்கள் பலத்தின் அடிப்படையில் பார்த்தால், இந்திய அணி, வங்கதேசத்தை விட பலமான அணியாக உள்ளது. பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அதனால், இந்தியா வெல்லும் என்பதே பலரின் கணிப்பாக உள்ளது.