இந்தியா வெற்றி
இந்தியா - வங்கதேசம் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை இந்தியா 2 - 0 என கைப்பற்றியது.
பலத்த எதிர்பார்ப்பு
பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடந்த இந்த டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல, சூதாட்ட களத்திலும் இந்தப் போட்டி சூடு பிடித்து இருந்தது.
சூதாட்ட புகார்
டெஸ்ட் போட்டி நடந்து கொண்டு இருந்த போதே ஐந்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் சூதாட்ட புகாரில் கைது செய்தனர். இப்படி ஒரு சூழலில் தான் வங்கதேச அணியின் உள்ளூர் மேலாளர் வீரர்கள் அறையில் ஐசிசி விதியை மீறி நடந்து கொண்டார்.
உள்ளூர் மேலாளர்
கொல்கத்தா டெஸ்ட் தொடருக்கு வங்கதேச அணியின் உள்ளூர் மேலாளராக தப்பான் சக்கி என்ற நபர் செயல்பட்டார். அவர் மேலாளர் என்ற முறையில் வங்கதேச அணியினரின் வீரர்கள் உடை மாற்றும் அறையில் அடிக்கடி சென்று வந்தார்.
மொபைல் போன்
அப்போது வீரர்கள் அறையில் மொபைல் போன் பயன்படுத்தி இருக்கிறார் சக்கி. அதைக் கண்ட பிசிசிஐ அதிகாரிகள் அவரை எச்சரித்துள்ளனர். ஐசிசியின் கட்டுப்பாடுகளின் படி வீரர்கள் உடை மாற்றும் அறையில் எந்த வகையான நவீன மின்தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தக் கூடாது.
அதிகாரிகள் புகார்
முதல் எச்சரிக்கைக்குப் பின்னும் அந்த நபர் வீரர்கள் அறையில் தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் அவர் மீது பிசிசிஐ அதிகாரிகள், பிசிசிஐயின் ஊழல் தடுப்பு மையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணை
விரைவில் சக்கியை பிசிசிஐ ஊழல் தடுப்பு அதிகாரி விசாரணை செய்வார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். மேலும், மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்றாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடைபெறலாம்.
ஷகிப் அல் ஹசன் தடை
சமீபத்தில் தான் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், புக்கி ஒருவருடனான தொடர்பை ஐசிசியிடம் முறைப்படி கூறாததற்காக ஓராண்டு தடை செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டரை நாள் போட்டி
இந்தியா - வங்கதேசம் இரு அணிகளுக்கும் இதுதான் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டி ஐந்து நாட்கள் வரை நடைபெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இரண்டரை நாளுக்கும் குறைவான கால அவகாசத்தில் இந்தப் போட்டி முடிவடைந்தது.