மஞ்ச்ரேக்கர் என்ன செய்தார்?
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வருகிறார். சமீப காலமாக அவரது வர்ணனை ஒரு தலைப்பட்சமாக மாறி வருகிறது. மும்பையை சேர்ந்த மஞ்ச்ரேக்கர், மும்பை வீரரான ரோஹித் சர்மா உள்ளிட்டோரை புகழ்ந்து பேசி வருகிறார். தோனி, கோலி உள்ளிட்டோரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ரசிகர்கள் புகார்
சில இந்திய வீரர்களை மட்டும் ஆதரித்து பேசுவது, அவருக்கு பிடிக்காத வீரர்கள் என்ன செய்தாலும் அதை தவறு என கூறுவது, எதிரணியை பாராட்டாமல், இந்திய அணி குறித்து மட்டுமே பேசி வருவது என அவர் வர்ணனை குறித்து இணையத்திலும், ஐசிசியிடமும் புகார் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
மற்ற வர்ணனை
ஆங்கில வர்ணனையில் மஞ்ச்ரேக்கர் தவிர்த்து மற்ற யார் மீதும் எந்த புகாரும் இல்லை. எனினும், பலரும் மஞ்ச்ரேக்கர் வர்ணனை செய்யும் போது சேனலை மாற்றி விடுவதாகவும், சிலர் மற்ற மொழி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாலாஜி கலாய்
இந்த நிலையில் தான் ஆர்ஜே பாலாஜி, சஞ்சய் மஞ்ச்ரேக்கரை கலாய்த்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு அதிக பார்வையாளர்கள் அதிகரித்து இருப்பதாகவும், அதனால், கேட்காமலேயே தமிழ் வர்ணனையாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாகவும். அதற்கு மஞ்ச்ரேக்கர் தான் காரணம் என்று கூறினார்.
கோட், வாட்ச் கொடுத்தது யார்?
இன்னைக்கு நாங்க இந்த கோட் வாங்கினோம், இந்த வாட்ச் கட்டி இருக்கோம், இந்த பேன்ட், ஷூ எல்லாம் போட்ருக்கேன் என்றால் அதற்கு காரணம் நீங்க பண்ற கமண்டரி தான் என்று செமயாக கலாய்த்தார். குஜராத்ல கூட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு நிறைய பார்வையாளர்கள் அதிகரித்து இருப்பதாகவும் கூறினார் பாலாஜி.
நடவடிக்கை பாயுமா?
இந்த அளவுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை மீது ரசிகர்கள் வெறுப்பில் இருந்தும் அவரை உலகக்கோப்பை தொடரில் வர்ணனையாளராக நியமித்து இருக்கும் ஐசிசி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இனியாவது உஷாராகுமா?