இரண்டாவது டி20 போட்டி
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால் 2 - 0 என டி20 தொடரை கைப்பற்றும் நிலை உள்ளது.
மஹா புயல்
இந்தப் போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் உள்ளது. அதற்கு காரணம், அரபிக் கடலில் உருவாகி இருக்கும் மஹா புயல். அந்த புயல் போட்டி நாளன்று கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
இடி மின்னல் மழை
அதனால், போட்டி நடைபெறும் ராஜ்கோட் பகுதியில் அதன் பாதிப்பு இருக்கும். இடி, மின்னல் மற்றும் மழை ஆகியவை காரணமாக இரண்டாவது டி20 போட்டி பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவுக்கு தான் சிக்கல்
மழை வந்தால் ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது போட்டி முழுவதுமே கூட ரத்து செய்யப்படலாம். ஆனால், இதில் எது நடந்தாலும் அது இந்திய அணிக்கு தான் பாதிப்பாக அமையும்.
ஓவர்கள் குறைக்கப்பட்டால்..
மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டால், இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஆடும் இந்திய அணிக்கு அது கூடுதல் சுமையை அளிக்கும். ஒருவேளை வங்கதேசம் சொதப்பலாக ஆடினால் மட்டுமே அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.
போட்டி ரத்து செய்யப்பட்டால்..
மழை காரணமாக இரண்டாவது டி20 போட்டி வெற்றி - தோல்வி இன்றி ரத்து செய்யப்பட்டால் அதுவும் இந்திய அணிக்கு தான் பாதிப்பு. காரணம், இந்தியா தொடரை வெல்ல முடியாத நிலை ஏற்படும். மூன்றாவது டி20யில் இந்தியா வென்றாலும், தொடரை சமன் செய்ய மட்டுமே முடியும்.
காற்று மாசு பாதிப்பு
முதல் டி20 போட்டி கடும் காற்று மாசுக்கு நடுவே தான் நடந்தது. அதனால், போட்டி பாதிக்கப்படவில்லை என்றாலும், வீரர்கள் பலர் உடலளவில் பாதிப்புக்கு உள்ளாகினர். இரு வங்கதேச வீரர்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசம் முதல் வெற்றி
அப்படி இருந்தும் அந்தப் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. முதன் முறையாக இந்திய அணியை டி20 போட்டியில் வீழ்த்தி வரலாற்று சாதனை செய்தது வங்கதேசம். மேலும், அந்தப் போட்டி ஆயிரமாவது சர்வதேச டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் வெற்றி
இரண்டாவது டி20 போட்டியில் மழைக்கு நடுவே வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என கைப்பற்றினால், அது இந்திய அணிக்கு எதிராக வங்கதேசம் கைப்பற்றும் முதல் டி20 தொடராக இருக்கும்.
அணியில் மாற்றம்
இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றே விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதிகபட்சமாக வேகப் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மது நீக்கப்பட்டு, ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்படலாம்.