ஐபிஎல் செயல்பாடு
வேகப் பந்துவீச்சாளரான தீபக் சாஹர் நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தாலும் இந்திய அணியில் அவரால் இடம் பெற முடியவில்லை. இந்திய அணியில் ஒரீரு போட்டியில் ஆடி இருந்த அவர், 2019 ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணியில் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
இந்திய அணியில் இடம்
ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் கலக்கிய தீபக் சாஹருக்கு இந்திய அணியில் அழைப்பு வந்தது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார் தீபக் சாஹர்.
வங்கதேச தொடரில் கலக்கல்
வங்கதேச டி20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் மிகக் குறைவாக ரன் கொடுத்த தீபக், மூன்றாவது போட்டியில் உச்சகட்டத்தை எட்டினார். வெறும் 7 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
சிறந்த பந்துவீச்சு
சர்வதேச டி20 அரங்கில் இதுவே மிகச் சிறந்த பந்துவீச்சு. 2012ஆம் ஆண்டு அஜந்தா மென்டிஸ்-இன் சிறந்த பந்துவீச்சான 8 ரன்களுக்கு 6 விக்கெட் சாதனையை முறியடித்தார் தீபக்.
ஹாட்ரிக் சாதனை
இதில் மற்றொரு சிறப்பாக ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தினார். இந்திய அளவில் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார்.
அந்த சிக்கல்
டி20 போட்டிகள் பகல் - இரவு போட்டிகளாக நடக்கும் நிலையில், இரவு நேரத்தில் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை காற்றில் இருக்கும் ஈரப்பதம் தான். அது கைகளில் ஈரப்பதத்தை உண்டாக்கி, பந்து வீசுவதை கடினமாக மாற்றி விடும்.
கற்றுக் கொண்ட வித்தை
இந்திய அணி மூன்றாவது போட்டியில் இரண்டாவதாக பந்து வீசினாலும், அந்த சிக்கலை தான் எப்படி எதிர் கொண்டு விக்கெட் வீழ்த்தினேன் என்பதை பற்றி கூறினார் தீபக் சாஹர். தான் சென்னையில் ஆடிய போது இந்த சிக்கலை சமாளிப்பது பற்றி கற்றுக் கொண்டதாக கூறினார்.
என்ன செய்ய வேண்டும்?
காய்ந்த மண்ணை அள்ளி கைகளில் பரபரவென தேய்த்துக் கொண்டு பந்து வீசுவதன் மூலம், பந்து கையை விட்டு தவறிப் போகாது. இந்த வித்தையை தான் சிஎஸ்கே அணியில் ஆடும் போது கற்றுக் கொண்டு இருக்கிறார் தீபக் சாஹர்.
கனவில் கூட முடியாது
4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்துவது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் என தன் சாதனை பற்றி குறிப்பிட்டார் தீபக்.
அணியில் நீடிப்பார்
இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு பார்க்கப்படும் நிலையில், அதில் தீபக் சாஹர் முன்னிலையில் இருக்கிறார். பும்ரா, ஷமி உள்ளிட்டோர் அணிக்கு திரும்பினாலும், தீபக் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என கருதப்படுகிறது.