தினேஷ் கார்த்திக் நிலை
தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு நடந்த நிதாஸ் ட்ராபி தொடரில் கலக்கலாக ஆடி இந்திய டி20 அணியில் முக்கிய வீரராக மாறினார். ஒருநாள் அணியில் அவ்வப்போது வாய்பு பெற்று ஆடி வந்தார்.
ரிஷப் பண்ட் வாய்ப்பு
இந்த நிலையில், டெஸ்ட் அணியில் நுழைந்த ரிஷப் பண்ட் அடுத்து தினேஷ் கார்த்திக் இடத்துக்கு போட்டியாக டி20 மற்றும் ஒருநாள் அணியில் நுழைந்தார். தோனிக்கு அடுத்த மாற்று விக்கெட் கீப்பர் யார் என்பதில் இவர்கள் இருவர் இடையே போட்டி இருந்தது.
உலகக்கோப்பை தொடர்
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற அவர், அதில் சரியாக ரன் குவிக்கவில்லை.
வாய்ப்பு மறுப்பு
அதனால், உலகக்கோப்பை தொடருக்குப் பின் தினேஷ் கார்த்திக்குக்கு டி20 அணியிலும் இடம் மறுக்கப்பட்டது. இனி இளம் வீரர்களுக்கு தான் அதிக வாய்ப்பு என்ற முடிவில் ரிஷப் பண்ட் தொடர்ந்து டி20 அணியில் வாய்ப்பு பெற்றார்.
பண்ட் பார்ம் அவுட்
ரிஷப் பண்ட் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் விருப்பமான வீரராக இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும், தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் மோசமாக ஆடி கடும் விமர்சனத்தை சந்தித்தார்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்
அதையடுத்து தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவருக்கு பதில் விரிதிமான் சாஹா டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்று அசத்தலாக ஆடினார். டெஸ்ட் அணியில் சாஹா மீண்டும் இடம் பெற்றது போலவே, தினேஷ் கார்த்திக் டி20 அணியில் இடம் பெறுவார் என கருதப்பட்டது.
வங்கதேச தொடர் அணி
இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட இருந்த வங்கதேச டி20 தொடருக்கான அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களான தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் ஆகியோர் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக ரன் குவித்து இருந்தனர்.
தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில் தனக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு தர வேண்டும். தான் தோனி போல ஆடுவேன் என்று கூறி இருந்தார். ரிஷப் பண்ட் சரியான பார்மில் இல்லாததால் தனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார் தினேஷ் கார்த்திக்.
பண்ட்டுக்கு மீண்டும் வாய்ப்பு
எனினும், வங்கதேச டி20 தொடருக்கான உத்தேச இந்திய அணியில் ரிஷப் பண்ட் மீண்டும் வாய்ப்பு பெற்றார். இளம் வீரர் என்ற அடிப்படையில் சஞ்சு சாம்சனுக்கும் அணியில் பேட்ஸ்மேனாக இடம் அளிக்கப்பட்டது.
இனி வாய்ப்பு கிடைக்குமா?
தினேஷ் கார்த்திக்கிற்கு தற்போது 34 வயதிற்கும் மேல் ஆவதால் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றே கருதப்படுகிறது. ரிஷப் பண்ட் சரியாக ஆடாவிட்டாலும் அவருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என தேர்வுக் குழு கூறி விட்டதால் தினேஷ் கார்த்திக்கிற்கு இனி ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.