பழைய சம்பவம்
கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு பின் நடந்த டெல்லி டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் முகத்தில் கவசம் அணிந்து ஆடியது பெரும் சர்ச்சை ஆனது. தங்களால் சரியாக சுவாசிக்க முடியவில்லை, உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது எனக் கூறி இலங்கை வீரர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர்.
கெட்ட பெயர் ஏற்படட்டது
அதனால், அப்போது இந்தியாவுக்கும், தீபாவளிக்கு பின் அங்கே போட்டியை நடத்த திட்டமிட்ட பிசிசிஐக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேசம் தொடர்
இந்தியா - வங்கதேசம் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 3 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.
வங்கதேசம் டி20 போட்டி
இதில் முதல் டி20 போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ளது. தீபாவளி முடிந்து சரியாக ஒரு வாரத்தில் டெல்லியில் முதல் டி20 போட்டிக்கு நாள் குறிக்கப்பட்டு இருப்பது தான் சிக்கலாக அமைந்துள்ளது.
காற்று மாசு
டெல்லியில் காற்றின் தரம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பே "மிக மோசம்" என்ற மதிப்பை பெற்றது. தீபாவளிக்கு மறுநாளும் அதே நிலையே நீடிக்கிறது. அதனால், முதல் டி20க்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ நம்பிக்கை
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபாவளிக்கு ஒரு வாரம் கழித்தே போட்டி நடக்க இருப்பதால் எந்த சிக்கலும் வராது. வீரர்களுக்கு எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அனுமதி
மேலும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று விட்டோம். அவர்கள் நவம்பர் 3 அன்று போட்டி நடத்த அனுமதி வழங்கி விட்டனர். அவர்களிடம் கலந்து ஆலோசித்தே டெல்லியில் போட்டி நடத்த முடிவு செய்தோம் என கூறினார்.
போட்டியை மாற்ற முடியாது
இப்போதைக்கு அனைத்துமே தீர்வு செய்யப்பட்டு விட்டது. திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்றார் அந்த அதிகாரி. டெல்லியில் எப்போதுமே காற்று மாசு அதிகம் இருக்கும். அதிலும், தீபாவளிக்கு பின் பட்டாசுகளின் காரணமாக மிக உச்சகட்டத்தில் இருக்கும்.
காரணம் என்ன?
அது தெரிந்தும் ஏன் பிசிசிஐ அங்கே போட்டிகளை திட்டமிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்த ஒரு அதிகாரி, வங்கதேச வீரர்களின் பயண திட்டத்தின் படியே டெல்லி முதல் போட்டியை நடத்தும் இடமாக தேர்வு செய்யப்பட்டது என்றார்.
மேற்கே செல்லும் வங்கதேசம்
வங்கதேச வீரர்கள் வடக்கே இருக்கும் டெல்லியில் துவங்கி, அடுத்தடுத்த போட்டிகளில் நாக்பூர், ராஜ்கோட், இந்தூர் என மேற்கே நகர்ந்து, கடைசி போட்டியை கொல்கத்தாவில் ஆடி, தங்கள் நாட்டுக்கு செல்லுமாறு, அவர்களின் வசதியை மனதில் வைத்து திட்டமிடப்பட்டதாக கூறினார்.