பேட்டிங் சொதப்பல்
ரிஷப் பண்ட் பேட்டிங் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் பெரிய அளவில் எடுபடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்த அவரால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நிலையான பேட்டிங் செயல்பாட்டை அளிக்க முடியவில்லை.
தவறான ஷாட்
அதிரடி பேட்ஸ்மேன் என பெயர் எடுத்த ரிஷப் பண்ட் எந்த சூழ்நிலை என்றாலும் கண்ணை மூடிக் கொண்டு அடித்து ஆடும் இயல்பை கொண்டவர். ஆனால், பல சமயம் நிதானமாக ஆட வேண்டிய நிலையில், தவறான ஷாட் அடித்து ஆட்டமிழப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.
பறிபோன வாய்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர், டி20தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிய ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் கடும் எச்சரிக்கைக்கு நடுவே களமிறக்கப்பட்டார். அதிலும் சொதப்பவே, அவரை அடுத்து நடந்த டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கியது இந்திய அணி.
வங்கதேச தொடரில் இடம்
இந்த நிலையில், வங்கதேச டி20 தொடரில் மீண்டும் இடம் பெற்றார் பண்ட். இந்த தொடரில் இது வரை நடந்த இரு போட்டிகளில் ஒரு முறை பேட்டிங் செய்ய வாய்ப்பு பெற்றார். அப்போது 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
டிஆர்எஸ் சொதப்பல்
அடுத்து முதல் போட்டியில் இரண்டு டிஆர்எஸ் வாய்ப்புகளை சரியாக கணிக்காமல் போன ரிஷப் பண்ட், ஒரு தவறான கேட்ச்சுக்கு டிஆர்எஸ் கேட்குமாறு கேப்டன் ரோஹித் சர்மாவை தவறாக வழிநடத்தினார்.
அடிப்படை தவறு
இரண்டாவது போட்டியிலும் அவரது தவறுகள் தொடர்ந்தன. ரிஷப் பண்ட் இந்த முறை விக்கெட் கீப்பிங்கின் அடிப்படையில் ஒரு தவறு செய்தார். ஸ்டம்ப்புக்கு முன்பே சில இன்ச் தூரத்தில் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.
கடும் விமர்சனம்
அந்த சம்பவத்தை அடுத்து ரிஷப் பண்ட் மீது கடும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக இணையத்தில் ரிஷப் பண்ட்டை அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற கருத்து அதிகமாக பகிரப்பட்டது. சிலர், அவருக்கு ஆதரவான கருத்துகளை கூறினர்.
|
மீண்டும் தோனி வேண்டும்
அதே சமயம், பல ரசிகர்கள் தோனி மீண்டும் டி20 அணியில் ஆட வேண்டும் என கூறினார். அதனால், தோனி உடனடியாக ட்விட்டரில் டிரென்டிங் ஆனார். பண்ட் செய்த தவறுகளால், தோனி டிரென்டிங் ஆனது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதிக ஆதரவு
பண்ட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், பிசிசிஐ தலைவர் கங்குலி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் அளிப்பது பற்றி பேசி உள்ளனர்.