டெஸ்ட் போட்டி கூட்டம்
இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக ரசிகர் கூட்டம் வருவதில்லை என்ற புகார் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது அது விவாதப் பொருளாக மாறியது.
முதல் பகல் இரவு டெஸ்ட்
அந்த சமயத்தில் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி, தான் பதவி ஏற்ற மறுநாளே பகல் - இரவு டெஸ்ட் போட்டி நடத்த முடிவு செய்தார். கேப்டன் கோலி அதற்கு உடனடியாக சம்மதம் கூறினார்.
சாதித்துக் காட்டிய கங்குலி
இந்தியா இதுவரை மற்ற அணிகளின் பகல் - இரவு டெஸ்ட் போட்டி அழைப்புக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தாமே முன்வந்து முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆட முடிவு செய்தது பிசிசிஐ தலைவராக கங்குலியின் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
பிரம்மாண்ட திட்டம்
இந்தியா - வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் - இரவு போட்டியாக மாற்றிய கங்குலி, தன் சொந்த ஊரான கொல்கத்தாவில் போட்டி நடைபெறுவதால் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்தார்.
அரசியல் தலைவர்கள்
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி என பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட இடம் பெற்றனர்.
இராணுவம் வரும்
கொல்கத்தா நகரம் முழுவதும் பிரம்மாண்ட விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தது. இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் வந்து, மைதானத்தில் இறங்கி, இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்தை கேப்டன்களிடம் வழங்குவார்கள் என பிரம்மாண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக கூறப்பட்டது.
கடைசி நேர மாற்றம்
ஆனால், கடைசி நேரத்தில் அமைச்சர் அமித் ஷா வரவில்லை என்பதோடு, இராணுவ வீரர்கள் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இதற்கான சரியான காரணம் என்ன என்பது கூறப்படவில்லை.
பாதுகாப்பு காரணம்
மேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பு கூறிய ஒரு விளக்கத்தில் வங்கதேச பிரதமர் மைதானத்துக்கு வருகை தருவதால் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஏமாந்த ரசிகர்கள்
ஆனால், இந்த விஷயம் பற்றி தெரியாத சாமானிய ரசிகர்கள் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்து வானத்தை அண்ணாந்து பார்த்து ஏமாந்து போனார்கள். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மணி அடித்து இந்தியா - வங்கதேசம் அணிகளின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை துவக்கி வைத்தார்.
பில்டப் தான் காரணம்
ரசிகர்கள் ஏமாந்து போக இந்தப் போட்டிக்கு முன் பிசிசிஐயால் கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப் தான் காரணம். இந்தப் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா என்பதும் சந்தேகம் தான். காரணம், 20 ஓவர்களுக்குள் வங்கதேசம் 6 விக்கெட்களை இழந்தது. இதுவே போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என கட்டியம் கூறுவதால், ரசிகர்கள் எந்த அளவிற்கு இந்தப் போட்டியை ரசிப்பார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.