தவறான கேட்ச்
மூன்றாவது டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கேப்டன் ரோஹித் சர்மாவை தவறான கேட்ச் ஒன்றிற்கு டிஆர்எஸ் கேட்க வைத்தார். அதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் மைதானத்தில் டிஆர்எஸ் மன்னனான தோனி பெயரை கூறி கோஷம் எழுப்பினர்.
கடும் விமர்சனங்கள்
வங்கதேச தொடருக்கு முன்பே ரிஷப் பண்ட் பேட்டிங் மீது கடும் விமர்சனங்கள் இருந்தது. அவர் அதிரடியாக ஆட வேண்டும் என்பதால் தவறான ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வந்தார்.
அதிக வாய்ப்புகள்
டெஸ்ட் அணியில் தன் வாய்ப்பை இழந்தார் ரிஷப் பண்ட். டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பர் என்ற இடத்திற்கு சென்றார். எனினும், இளம் வீரர் என்பதால் டி20 அணியில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தது தேர்வுக் குழு.
விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பல்
வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களை முறியடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இந்த தொடரில் பேட்டிங் மட்டுமில்லாது விக்கெட் கீப்பிங்கிலும் படுமோசமான தவறுகளை செய்து விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.
முன்னாள் வீரர்கள் ஆதரவு
முன்னாள் வீரர்கள் பலரும் ரிஷப் பண்ட் செய்யும் சிறு தவறுகளை கூட ரசிகர்கள் மோசமாக விமர்சிப்பதாக கூறியும், ரசிகர்கள் அவரை கண் கொத்திப் பாம்பாக பார்த்து வந்தனர்.
தவறான கணிப்பு
முதல் போட்டியில் நிதான பேட்டிங் ஆடியதையும், கேப்டன் ரோஹித்தை தவறான கேட்ச்சுக்கு டிஆர்எஸ் கேட்க வைத்ததையும் விமர்சித்தனர் ரசிகர்கள். மேலும், இரண்டு எல்பிடபுள்யூ வாய்ப்புகளை அவர் சரியாக கணிக்காமல் போனதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அடிப்படை தவறு
இரண்டாம் போட்டியில் விக்கெட் கீப்பிங் அடிப்படையில் தவறு செய்த ரிஷப் பண்ட், ஸ்டம்ப்புகளுக்கு சில இன்ச் முன்பு பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். அது நோ பாலாக மாறியது. அப்போதும் தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்ட்டை விமர்சித்தனர் ரசிகர்கள்.
வைடு பந்து
இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணியின் சேஸிங்கின் போது 15வது ஓவரை கலீல் அஹ்மது வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்து வைடாக சென்றது.
அவுட் கேட்டார்
அந்த பந்தை பேட்ஸ்மேன் தவறவிட்டார். அப்போது பந்தை கேட்ச் பிடித்த ரிஷப் பண்ட் பந்து, பேட்டில் பட்டு எட்ஜ் ஆனதாகக் கூறி அவுட் கேட்டார். அம்பயர் மறுத்து விட்டார். பண்ட், கேப்டன் ரோஹித்தை நம்ப வைத்து டிஆர்எஸ் கேட்க வைத்தார்.
அதிர்ச்சி
ரீப்ளேவில் பந்து, பேட்டில் படவே இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. அம்பயர் அவுட் இல்லை என அறிவித்தார். மீண்டும் ஒரு முறை தவறான டிஆர்எஸ் கேட்ட ரிஷப் பண்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தோனி கோஷம்
மைதானம் முழுவதும் ரசிகர்கள் "தோனி, தோனி" என கோஷம் எழுப்பினர். ரிஷப் பண்ட்டை நீக்கி விட்டு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் டிஆர்எஸ் மன்னனான தோனியை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்பதே இந்த கோஷத்தின் அர்த்தம். பண்ட் கடும் அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.