இந்தியா - வங்கதேசம் தொடர்
இந்தியா - வங்கதேசம் இடையே ஆன டி20 மற்றும் டெஸ்ட் தொடர் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் துவங்கி கொல்கத்தா வரை வரிசையாக இந்தியாவின் முக்கிய வட - மேற்கு நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
டெல்லி போட்டி சர்ச்சை
இதில் முதல் டி20 போட்டி நடைபெறும் டெல்லியில் காற்று மாசு காரணமாக துவக்கம் முதலே சர்ச்சை எழுந்து வந்தது. பலரும் அங்கே போட்டி நடத்தக் கூடாது என கூறி வந்தனர்.
அதிகரித்த காற்று மாசு
தீபாவளி அன்று பட்டாசு வெடித்த புகை மற்றும் டெல்லியின் இயல்பான காற்று மாசு இரண்டும் சேர்ந்து காற்றின் தரத்தை மிக மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றது. காற்று தர அளவீட்டின் படி 400க்கும் மேல் சென்றால் பல வியாதிகள் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த அளவை தாண்டி சென்றது.
இலங்கை அணி சம்பவம்
2017இல் இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் ஆடிய போதும் இதே போன்ற நிலை இருந்தது. அப்போது இலங்கை வீரர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பிலும், முகமூடி அணிந்தும் போட்டியில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முகமூடி அணிந்த வீரர்கள்
இந்த நிலையில், வங்கதேச வீரர்கள் சிலரும் முகமூடி அணிந்தே பயிற்சி மேற்கொண்டனர். அதனால், போட்டி எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்தன.
|
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சமூக ஆர்வலர்கள் சிலர் டெல்லியில் காற்று மாசு உச்சகட்டத்தில் இருக்கும் போது கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டாம் என பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்தனர்.
|
கங்குலி உறுதி
ஆனால், கங்குலி ஏற்கனவே திட்டமிட்ட போட்டி என்பதால் கடைசி நேரத்தில் இடத்தை மாற்ற முடியாது என கூறினார். பிசிசிஐ அதிகாரிகளும் டெல்லி அரசிடம் அனுமதி பெற்று விட்டோம் என சப்பைக் கட்டு கட்டி சமாளித்து வந்தனர்.
எல்லை மீறியது
தீபாவளி முடிந்து ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என எதிர்பார்த்த நிலையில், காற்றின் தரம் 500ஐ தாண்டி சீர் கெட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, பலருக்கும் தொண்டை வறட்சி, கண் எரிச்சல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகள் தலை தூக்க துவங்கி இருக்கிறது.
பார்வை குறைபாடு
மேலும், இன்று போட்டி நடைபெற வேண்டிய நிலையில், கண் பார்வை தெரியாத அளவுக்கு பனி கலந்த புகைமூட்டம் காணப்படுகிறது. சில அடி தூரத்தில், எதிரில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக பார்க்க முடியாத நிலை இருக்கிறது.
பெரும் அவமானம்
இந்த நிலையில், டி20 போட்டி நடத்த வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. அதனால், முதன்முறையாக காற்றின் தரம் மோசமாக இருப்பதால் ஒரு கிரிக்கெட் போட்டி தடை செய்யப்பட உள்ளது. இந்தியாவின் தலைநகரில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது என்பது பெரும் அவமானம் என ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். போட்டி நடக்குமா?