10 மாதங்கள்
அக்டோபர் 23 அன்று தான் கங்குலி அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார். அவர் முன் பல்வேறு சவால்கள் இருந்தாலும், அவற்றை நிறைவேற்ற கங்குலிக்கு 10 மாதங்கள் மட்டுமே கால அவகாசம் இருந்தது.
கடினமான சவால்
கங்குலி 10 மாதத்தில் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி இருந்தது. ஆனால், அவர் முன் இருந்த கடினமான சவால் ஒன்றை ஒரே வாரத்தில் உடைத்து சாத்தியமாக்க இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக மக்கள் நேரில் பார்க்க வருவதில்லை என்பது தான் அந்த சவால்.
பகல் - இரவு டெஸ்ட்
அதற்கு கங்குலி வைத்திருந்த தீர்வு பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது என்பது தான். கடந்த 2014 முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் அவ்வப்போது சர்வதேச அரங்கில் நடந்தாலும், இந்தியா இதுவரை ஒரு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் கூட ஆடியது இல்லை.
விராட் கோலி ஒப்புதல்
இந்த நிலையில், வீரர்கள் ஒப்புதல் பெறுவது முதல் சவாலாக கருதப்பட்டது. தான் பதவியேற்ற மறுநாள் கேப்டன் விராட் கோலியை சந்தித்த கங்குலி, பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து கேட்டுள்ளார், கோலி அதற்கு அணி சார்பாக ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கதேச டெஸ்ட் தொடர்
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 14 அன்று துவங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட அந்த தொடரிலேயே ஒரு போட்டியை பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த முடிவு செய்தார்.
ஈடன் கார்டன் டெஸ்ட்
இந்த மாற்றத்திற்கு மைதான நிர்வாகமும் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், தான் பிசிசிஐ தலைவர் ஆகும் வரை தலைவர் பதவியில் இருந்த மேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் - இரவு டெஸ்டாக நடத்த நடவடிக்கை எடுத்தார் கங்குலி.
கடிதம் எழுதினார்
கோலியிடம் பேசி ஒப்புதல் வாங்கிய அதே நாளில் வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு பகல் - இரவு டெஸ்ட் ஆட சம்மதம் கேட்டு கடிதம் எழுதி விட்டார். இதுவரை வங்கதேசமும் ஒரு பகல் - இரவு டெஸ்ட் போட்டியிலும் ஆடியதில்லை என்பதால் சிறிய தாமதம் ஏற்பட்டது.
சம்மதம் சொன்ன வங்கதேசம்
பின்னர் வீரர்களை சம்மதிக்க வைத்த வங்கதேச கிரிக்கெட் போர்டு, தங்கள் நாட்டிற்கு மிகவும் நெருக்கமான, வரலாற்று தொடர்பு கொண்ட கொல்கத்தாவில் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆட சம்மதம் தெரிவித்தது.
முதல் பகல் - இரவு ஆட்டம்
ஒரே வாரத்தில் இந்த அத்தனை சம்பவங்களும் நடந்தேறி இருக்கிறது. இந்தியா - வங்கதேசம் இரு அணி வீரர்களுக்கும் இதுவே முதல் பகல் - இரவு டெஸ்ட். வெறும் ஒரு மாதத்தில் அந்தப் போட்டி நடைபெற உள்ளது.
பிங்க் நிற பந்து
பகல் - இரவு போட்டிக்கு பிங்க் நிற வந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் எஸ்ஜி வகை பிங்க் நிற பந்துகளை தயார் செய்ய வேண்டும். இந்த வேலைகள் துரிதமாக நடந்து வருவதாக தெரிகிறது.
அரங்கு நிறைய வேண்டும்
அடுத்த கட்டமாக, இந்தியாவில் நடக்க இருக்கும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை அரங்கு நிறைந்த போட்டியாக நடத்த கங்குலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, அதற்கான முயற்சிகளில் மேற்கு வங்காள கிரிக்கெட் போர்டு இறங்கி உள்ளது.