டாஸ் வெற்றி
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச உள்ளதாக தெரிவித்தார். இரண்டாம் பாதியில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக பந்து வீச்சு சிரமமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தார் ரோஹித்.
வங்கதேசம் அதிரடி துவக்கம்
பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் வங்கதேசம் அதிரடி துவக்கம் பெற்றது. துவக்க வீரர்கள் லிட்டன் தாஸ், நயீம் சேர்ந்து அபார துவக்கம் அளித்தனர். 6 ஓவர்களில் 54 ரன்கள் குவித்து மிரட்டியது அந்த அணி.
இந்திய அணி தவறுகள்
முதல் ஏழு ஓவர்களில் இந்திய அணி ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பு மற்றும் ஒரு கேட்ச் வாய்ப்பை தவற விட்டு அதிர்ச்சி அளித்தது. அதை பயன்படுத்தி வங்கதேச துவக்க வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
கை கொடுத்த பந்துவீச்சாளர்கள்
கலீல் அஹ்மது தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் கை கொடுக்க, இந்திய அணி பின் பாதியில் மீண்டது. லிட்டன் தாஸ் 29, நயீம் 36, சௌம்யா சர்க்கார் 30, மக்மதுல்லா 30 ரன்கள் குவித்தனர்.
சாஹல் 2, தீபக் சாஹர் 1, சுந்தர் 1, கலீல் அஹ்மது 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேசம் 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 160 முதல் 180 ரன்கள் வரை குவிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சேஸிங்
154 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் - தவான் ஜோடி அதிரடி துவக்கம் அளித்தது. தவான் எப்போதும் போல ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் ஆட, மறுபுறம் ரோஹித் சர்மா வெளுத்துக் கட்டினார்.
ரோஹித் அதிரடி
23 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய ரோஹித், ஆறு சிக்ஸ் மற்றும் ஆறு ஃபோர் அடித்து அசத்தினார். இந்திய அணி 10 ஓவர்களிலேயே 113 ரன்கள் குவிக்க, அப்போதே வெற்றி உறுதியானது.
தவறிப் போன சதம்
அதன் பின், இந்தியா வெற்றி பெறுமா? என்பதை விட ரோஹித் சர்மா சதம் அடிப்பாரா? என்பதே முக்கிய விஷயமாக மாறியது. எனினும், ரோஹித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கேப்டனாக முதல் போட்டி தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் வெறியாட்டம் ஆடி வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி
தவான் 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் 8 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 13 பந்துகளில் 24 ரன்கள் குவித்து 15.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டுவதை உறுதி செய்தார்.
இந்தியா வெற்றி
இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இந்திய அணி சேஸிங்கில் கில்லி தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. பீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் மட்டுமே இந்திய அணியில் கவலை அளிக்கும் வகையில் இருந்தது.
தொடர் சமன்
முதல் போட்டியை இழந்த இந்திய அணி இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1 - 1 என சமன் செய்தது. மூன்றாம் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் அந்த போட்டிக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.