டி20 தொடர்
முதல் இரண்டு டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்தன. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இறுதிப் போட்டி போன்ற பரபரப்புடன் துவங்கியது இந்தப் போட்டி.
இந்தியா பேட்டிங்
டாஸில் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 2, தவான் 19 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். இந்தியா 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. எனினும், அடுத்து வந்த ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அதிரடியாக ஆடி அணியை மீட்டது.
ராகுல், ஸ்ரேயாஸ் அசத்தல்
ராகுல் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் 5 சிக்ஸர் அடித்து மிரட்டினார். 33 பந்தில் 62 ரன் குவித்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தது.
இந்தியா ஸ்கோர்
கடைசி நேரத்தில் மனிஷ் பாண்டே 13 பந்துகளில் 22* ரன்கள் குவித்தார். இந்தியா 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியின் அல் அமின் 1, ஷபியுல் இஸ்லாம் 2, சௌம்யா சர்க்கார் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
வங்கதேசம் சேஸிங்
வங்கதேசம் 175 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி சேஸிங் செய்யத் துவங்கியது. மூன்றாவது ஓவரில் தீபக் சாஹர் அடுத்தடுத்த பந்துகளில் லிட்டன் தாஸ் மற்றும் சௌம்யா சர்க்கார் விக்கெட்களை வீழ்த்தினார்.
நயீம் மிரட்டல்
துவக்க வீரர் நயீம் அதன் பின் மிரட்டல் அடி கொடுக்கத் துவங்கினார். அவருக்கு சிறிது நேரம் கூட்டணி அமைத்து ஆடிய மிதுன் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நயீம் அரைசதம் கடந்து ஆடி வந்தார்.
15 ஓவர்கள்
15 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்து இருந்தது. கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. அதிரடியாக ஆடி வந்த நயீம் களத்தில் இருந்தார். இந்திய ரசிகர்கள் அப்போது இந்தியா வெற்றி பெறுமா? என்ற சந்தேகத்தில் இருந்தனர்,
துபே, சாஹர் வேட்டை
அப்போது 16வது ஓவரில் சிவம் துபே பந்துவீச்சில் நயீம், ஆபிப் ஹுசைன் ஆட்டமிழந்தனர். அதன் பின் சாஹல் 1, தீபக் சாஹர் 3 விக்கெட்கள் வீழ்த்த வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது.
இந்தியா வெற்றி
இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் சாஹர் கடைசி மூன்று விக்கெட்டை ஹாட்ரிக் ஆக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹர் 6, துபே 3, சாஹல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடரைக் கைப்பற்றியது
இந்திய அணி 2 - 1 என்ற அளவில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ரோஹித் சர்மா தலைமையில் மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி.