பகல் - இரவு டெஸ்ட்
இந்தியா - வங்கதேசம், இரு அணிகளும் இதுவரை பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடியது இல்லை. இரு அணிகளும் முதன் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளன.
பயிற்சி இல்லை
பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் [பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்தில் இந்திய அணி இதுவரை ஆடியதில்லை. ஒரு சில உள்ளூர் போட்டிகளில் சில வீரர்கள் பிங்க் பந்தில் ஆடி உள்ளனர். ஆனால், அது மட்டுமே டெஸ்ட் போட்டியை சந்திக்கும் அளவு போதுமான பயிற்சியை தராது.
நேரம் இல்லை
இந்திய அணி அதிக இடைவெளி இல்லாமல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே பிங்க் நிற பந்தில் பயிற்சியை தொடங்கியது இந்தியா.
சிவப்பு - பிங்க் பந்துகள்
இந்திய பேட்ஸ்மேன்கள் முதலில் சிவப்பு நிற பந்தில் முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்ட பின், பிங்க் நிற பந்தை எதிர்கொண்டனர். பந்துவீச்சாளர்கள் பயிற்சியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் தாக்குதல் பாணியில் பந்துவீசி மிரட்டினர்.
கோலி பயிற்சி
கேப்டன் விராட் கோலி முதலில் சிவப்பு நிற பந்தை சந்தித்தார். அவர் அதிரடியாக பந்தை விளாசித் தள்ளினார். அடுத்து பிங்க் நிற பந்துவீச்சில் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
திட்டிக் கொண்ட கோலி
சில முறை பந்து கோலியை தாக்கியது. சில முறை தன் இயல்பான ஷாட்களை அடித்தார் கோலி. எனினும், அவர் எதிர்பார்த்தது போல, பிங்க் நிற பந்தில் பேட்டிங் இயல்பாக வரவில்லை. சில ஷாட்கள் தவறிய போது, தன்னைத் தானே திட்டிக் கொண்டார் கோலி.
மயங்க் அகர்வால் நிலை
சிறந்த பேட்ஸ்மேனுக்கே அந்த நிலைமை என்றால், குறைந்த சர்வதேச அனுபவம் கொண்ட மயங்க் அகர்வால் நிலை இன்னும் மோசமாக இருந்தது. ஒரு முறை பந்து, பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. அப்போது கடுப்பான மயங்க் அகர்வால், ஸ்டம்ப்புகளை பேட்டால் அடித்து நொறுக்கி கீழே தள்ளினார்.
புஜாரா தடுமாற்றம்
டெஸ்ட் மன்னனான புஜாரா, கடந்த டெஸ்ட் தொடர்களில் நிலையாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். சில போட்டிகளில் அடித்து ஆடினாலும், சில போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். அவருக்கு பிங்க் நிற பந்து மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.
அணிக்கு சிக்கல்
இது இந்திய அணிக்கு புதிய சிக்கலாக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் தொடங்கி, முடியும் வரை இந்திய வீரர்களால் பிங்க் நிற பந்தில் பயிற்சி மேற்கொள்ள முடியாது. முதல் டெஸ்ட் முடிந்த பின் இருக்கும் இரண்டு - மூன்று நாட்களில் வீரர்கள் பிங்க் நிற பந்தை எதிர்கொள்ள தயார் செய்ய வேண்டும்.
வங்கதேச அணி நிலை
வங்கதேச வீரர்களும் இதுவரை பிங்க் நிற பந்தில் ஆடியதில்லை என்பதால் இந்தியா ஓரளவு சமாதானம் செய்து கொண்டாலும், பிங்க் நிற பந்து இந்திய அணியின் பலவீனமாக மாற வாய்ப்புள்ளது.