தீபாவளி புகை
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோத இருக்கும் முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. தீபாவளியில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் டெல்லியின் இயல்பான காற்று மாசு இரண்டும் சேர்ந்து காற்றின் தரத்தை மிக மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.
கண் எரிச்சல் பிரச்சனை
டெல்லியில் தற்போதைய சூழலில் வெளியே சென்றால் லேசான கண் எரிச்சல் ஏற்படுகிறது என மைதான அதிகாரி ஒருவரே கூறி இருந்தார். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
போட்டி நடத்த வேண்டாம்
இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் டெல்லியில் டி20 போட்டி நடத்தினால் அது ரசிகர்களுக்கும் பாதிப்பாக இருக்கும் என்பதால், இங்கே போட்டி நடத்த வேண்டாம் என கோரி கங்குலிக்கு கடிதம் எழுதியது இணையத்தில் வேகமாக பரவியது.
பிசிசிஐ பிடிவாதம்
எனினும், பிசிசிஐ வட்டாரம் தாங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று விட்டோம் என்றும், தீபாவளி முடிந்து ஒரு வாரம் கழித்து தான் போட்டி நடக்கிறது என்பதால் சிக்கல் இல்லை என பிடிவாதம் பிடித்து வந்தது.
கங்குலி முடிவு
பிசிசிஐ தலைவர் கங்குலி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் டெல்லியில் தான் முதல் டி20 போட்டி நடக்கும் என விளக்கம் அளித்து, போட்டி நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
இலங்கை வீரர்கள் செயல்
போட்டி அங்கே தான் நடக்கப் போகிறது என்ற நிலையில், 2017 தீபாவளிக்கு சில நாட்கள் பின் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் மூச்சுக் கோளாறு மற்றும் உடல் உபாதை காரணமாக முகமூடி அணிந்து ஆடியது பெரும் சர்ச்சை ஆனது.
பயிற்சியில் சிக்கல்
வெளிநாட்டு ரசிகர்கள் இடையே இந்தியாவில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் என்ற தவறான கற்பிதத்தை ஏற்படுத்தியது அந்த சம்பவம். இந்த நிலையில், முதல் டி20 போட்டிக்கு முன்னதாக இந்தியா - வங்கதேச வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்வதிலும் சந்தேகம் நீடித்து வந்தது.
|
லிட்டன் தாஸ் புகைப்படம்
இந்த நிலையில், வங்கதேச வீரர்கள் தங்கள் பயிற்சியை வியாழன் அன்றே தொடங்கினர். மற்ற வீரர்கள் முகமூடி அணியாவிட்டாலும், லிட்டன் தாஸ் முகமூடி அணிந்து பயிற்சி மேற்கொண்டார். அந்த புகைப்படம் வேகமாக இணையத்தில் பரவியது. இது மீண்டும் இந்தியாவுக்கு மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது. இன்னும் போட்டி நடக்கும் போது என்ன ஆகுமோ? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.
கம்பீர் கருத்து
டெல்லியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன கௌதம் கம்பீர் டெல்லியில் காற்று மாசு குறையும் வரை எந்த போட்டியும் நடக்கக் கூடாது. மக்களை விட எந்த விளையாட்டும், போட்டியும் முக்கியம் இல்லை என கூறினார்.
|
இது தேவையா?
இப்படி ஒரு சிக்கலான சூழலில் ஆயிரக்கணக்கான மக்களை கூட்டி ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தியே ஆக வேண்டுமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. ஆனால், பிசிசிஐ-யை பொறுத்தவரை இந்தப் போட்டியை திடீரென மாற்றினால் அது பல வகைகளிலும் இந்த டி20 தொடரை பாதிக்கும் என்பதால் வேறு வழியின்றி போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது.