இரண்டாவது டி20 போட்டி
இந்தியா - வங்கதேசம் மோதிய இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி சேஸிங்கில் பலமான அணி என்பதால் இந்த முடிவை எடுத்தது.
வங்கதேசம் பேட்டிங்
வங்கதேசம் துவக்கத்தில் அபாரமாக பேட்டிங் செய்தது. அந்த அணியின் லிட்டன் தாஸ், நயீம் அதிரடி துவக்கம் அளித்தனர். முதல் ஐந்து ஓவர்களில் 41 ரன்கள் குவித்தது அந்த அணி.
இந்தியா தடுமாற்றம்
துவக்கத்தில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது இந்திய அணி. வேகப் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மது அதிக ரன்களை வாரிக் கொடுத்தும் சிக்கலானது. அதனால், ஐந்தாவது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் சாஹலை பந்து வீச அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
சாஹல் ஓவர்
சாஹல் அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே திருப்பத்தை கொடுக்கும் பந்தை வீசினார். மூன்றவது பந்தை சந்தித்த லிட்டன் தாஸ் ஏறி வந்து அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்தை முழுவதுமாக தவறவிட்டார்.
எளிதான ஸ்டம்பிங்
பந்து நேராக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. இது மிகவும் எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பு. பேட்ஸ்மேன் கிரீஸிலேயே இல்லை என்பதால் நூறு சதவீதம் இது விக்கெட் தான்.
குஷியில் செய்த காரியம்
ஆனால், பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு சென்ற பின் பந்து தன்னை நோக்கி வருவதை கண்ட ரிஷப் பண்ட் குஷியில் பந்தை ஸ்டம்ப்புக்கு சில இன்ச் முன்பே பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.
அவுட் இல்லை
அவர் ஸ்டம்பிங் செய்த உடன் இந்திய வீரர்கள் விக்கெட் விழுந்தது என மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், மூன்றாவது அம்பயர் ரிஷப் பண்ட் ஸ்டம்ப்புக்கு சில இன்ச் தூரம் முன்பு பந்தை பிடித்தது விதிப்படி தவறு என்பதை கண்டு பிடித்து நாட் அவுட் கொடுத்து விட்டார்.
நோ பால் கொடுத்தார்
அதை விட மோசமாக, விதிப்படி விக்கெட் கீப்பர் வீசப்பட்ட பந்தை பேட்ஸ்மேன் அடிக்காமல் விடும் போது, ஸ்டம்ப்புக்கு முன்பே கீப்பர் பந்தை பிடித்தால் அது நோ பால் என்பதால், நோ பால் கொடுத்தார் அம்பயர். அதோடு ஃப்ரீ-ஹிட்டும் கொடுக்கப்பட்டது.
வீரர்கள் அதிர்ச்சி
இதைக் கண்டு கேப்டன் ரோஹித் சர்மா கடுப்பானார். விக்கெட் வாய்ப்பை இழந்த சாஹல் மற்றும் பிற வீரர்களும் ரிஷப் பண்ட் செய்த அடிப்படை விக்கெட் கீப்பிங் தவறை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அம்பயர் முடிவை நம்ப முடியாமல் பார்த்தனர்.
இரண்டு ஃபோர்
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, அடுத்த ஃப்ரீ-ஹிட் பந்து மற்றும் அதற்கு அடுத்த பந்தில் லிட்டன் தாஸ் இரண்டு ஃபோர் அடித்து வெறுப்பேற்றினார். ரிஷப் பண்ட் தொடர்ந்து தவறு செய்து வருவதால் சிக்கலில் இருக்கிறார்.