தவறுகள் நடந்தது
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா பந்து வீசிய போது பல தவறுகள் நடந்தது.
ரிஷப் பண்ட் தவறு
குறிப்பாக, ரிஷப் பண்ட் பந்தை ஸ்டம்புக்கு சில இன்ச் முன்பே பிடித்து ஸ்டம்பிங் செய்தார். அது அவுட் இல்லை என்று கூறிய மூன்றாவது அம்பயர், நோ பால் என்றும் அறிவித்தார்.
அதிர்ச்சி அடைந்தார்
அது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரிஷப் பண்ட் மீது கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா ஒரு கேட்ச்சை நழுவ விட்டார். தொடர்ந்து பல சம்பவங்கள் இந்திய அணிக்கு பாதகமாக நடந்து வந்தது.
மூன்றாவது அம்பயர்
இந்த நிலையில், ரிஷப் பண்ட் மீண்டும் ஒரு ஸ்டம்பிங் செய்தார். இது அவுட் தான் என்றாலும், பண்ட் மீண்டும் ஸ்டம்ப்புக்கு முன்பே பந்தை பிடித்தாரா? என மூன்றாவது அம்பயர் ரீப்ளே செய்து பார்த்தார்.
முடிவை காட்ட வேண்டும்
அதன் முடிவில், ரிஷப் பண்ட் சரியாக தான் ஸ்டம்பிங் செய்துள்ளார் என தெரிய வந்தது. இந்த நிலையில், மைதானத்தில் இருக்கும் திரையில் மூன்றாவது அம்பயர் தன் தீர்ப்பு என்ன என்பதை காட்ட வேண்டும்.
கெட்ட வார்த்தை வசவு
அப்போது அவர் அவுட் என்பதற்கு பதிலாக நாட் அவுட் என காட்டினார். அதைக் கண்ட கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபம் அடைந்தார். ஹிந்தியில் உள்ள கெட்ட வார்த்தை ஒன்றை பயன்படுத்தி அம்பயரை வசைபாடினார் ரோஹித்.
கேமராவில் பதிவு
அந்த காட்சி கேமராவில் தெளிவாக பதிவானது. மேலும், ரோஹித் சர்மா அருகே தான் கள அம்பயர் நின்று இருந்தார். அவர் ரோஹித்தின் வசையை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
ரோஹித் அளித்த விளக்கம்
இந்த சம்பவம் குறித்து பின்னர் செய்தியாளர்கள் ரோஹித் சர்மாவிடம் கேட்டனர். அப்போது பேசிய ரோஹித் சர்மா, "களத்தில் நான் சற்று உணர்ச்சிவசப்படும் நபர். சில முடிவுகள், களத்தில் நடந்த சில விஷயங்கள் எங்களுக்கு சறுக்கலாக இருந்தது" என்றார்.
சிரித்தார் ரோஹித்
மேலும், "வேலையை செய்து முடிக்க வேண்டும் என்பது தான் இறுதி நோக்கம். அதனால், சில சமயம் நாங்கள் உணர்ச்சிவசப்பட வேண்டிய நிலை ஏற்படும். அடுத்த முறை நான் கேமரா எங்கே இருக்கிறது என பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி சிரித்தார் ரோஹித்.
திட்டு உண்டு?
ஆக மொத்தத்தில், இனி அப்படி திட்ட மாட்டேன் என ரோஹித் கூறவில்லை. மாறாக கேமரா இருக்கும் திசையை பார்த்து திட்ட மாட்டேன் என்று தான் கூறி இருக்கிறார்.