வங்கதேச டி20 தொடர்
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா தோல்வியுடன் துவக்கியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா, இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இக்கட்டான நிலை
மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்தால் டி20 தொடரை வங்கதேசத்திடம் இழக்க நேரிடும் என்ற நிலையில், இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடியது. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அனைத்து டி20 தொடர்களிலும் வென்று இருக்கும் நிலையில், இந்த தொடரிலும் வெற்றி பெறும் என்றார் நம்பிக்கை இருந்தது.
மூன்றாவது டி20 போட்டி
இந்த நிலையில் துவங்கிய மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ராகுல் 52, ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள் குவிக்க இந்திய அணி 174 ரன்கள் குவித்தது.
நயீம் அசத்தல் பேட்டிங்
அடுத்து ஆடிய வங்கதேச அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் துவக்க வீரர் நயீம் மட்டும் அதிரடியாக ரன் குவித்து வந்தார். 12 ஓவர்களில் வங்கதேசம் 106 ரன்கள் எடுத்து 2 விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. ஓவருக்கு 8 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது அந்த அணி.
கைமீறிப் போன போட்டி
அப்போது இந்தியா அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று தான் கருதப்பட்டது. இந்திய வீரர்களின் உடல் மொழியில் ஒரு பதற்றம் தெரிந்தது. ரசிகர்களும் அதிர்ச்சியுடன் இளம் வீரர் நயீம் ஆடும் அதிரடி ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ரோஹித் பேச்சு
அப்போது இந்திய வீரர்களை மைதானத்துக்கு நடுவே அழைத்த கேப்டன் ரோஹித் சர்மா, வெற்றி பெற வேண்டும் என்பதை குறித்து உத்வேகமாக பேசி இருக்கிறார். அவரது பேச்சு தங்களை வெற்றியை நோக்கி போராட வைத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மாறிய போட்டி
அந்த பேச்சுக்குப் பின் 13வது ஓவரில் இருந்து போட்டி மாறியது. அதன் பின் தொடர்ந்த இடைவெளிகளில் விக்கெட் வேட்டை நடத்தியது இந்தியா. அதுவே, வங்கதேச அணியின் ரன் வேகத்தை முற்றிலுமாக குறைத்தது.
துபே, சாஹர்
சிவம் துபே மற்றும் சாஹர் கடைசி நேரத்தில் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினர். சாஹர் ஹாட்ரிக் எடுத்ததுடன், சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்து மிரட்டினார்.
இந்தியா வெற்றி
இந்தியா இந்தப் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா தன் பேச்சால் வீரர்களை உத்வேகப்படுத்தி போட்டியில் வெற்றி தேடிக் கொடுத்ததுடன், டி20 தொடரையும் வென்று அசத்தினார்.
சிறந்த கேப்டன்
ரோஹித் சர்மா எப்போதுமே தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். தற்போது வீரர்களை உத்வேகப்படுத்தி, வெற்றி தேடித் தந்து தன் ஆளுமையை நிரூபித்துள்ளார்.