டாஸ் வெற்றி
இரண்டாவது போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. இந்திய அணி சேஸிங்கில் சிறப்பான அணி என்பதால், கேப்டன் ரோஹித் உடனடியாக பந்துவீச்சை தேர்வு செய்தார். வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது.
வங்கதேசம் அதிரடி
வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ், நயீம் அதிரடி துவக்கம் அளித்தனர். இருவரையும் பிரிக்க முடியாமல் திணறியது இந்திய அணி. அவர்கள் இருவரும் 6 ஓவர்களில் 54 ரன்கள் குவித்தனர்.
ரிஷப் பண்ட் சொதப்பல்
ஆறாவது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எளிய ஸ்டம்பிங் வாய்ப்பு ஒன்றை தன் அடிப்படை தவறால் சொதப்பினார். விதிப்படி பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் விடும் போது, ஸ்டம்ப்புக்கு முன் பந்தை பிடித்தால் அது நோ பால் ஆகும். ரிஷப் பண்ட் கிளவுஸ் சில இன்ச்கள் ஸ்டம்ப்புக்கு முன் இருந்ததால் ஸ்டம்பிங் வாய்ப்பும் பறிபோய், நோ பால் கொடுக்கப்பட்டது.
அதிர்ந்த ரோஹித்
அதனால், அதிர்ந்து போனார் கேப்டன் ரோஹித். வெற்றி பெற வேண்டிய போட்டியில் இப்படி ஒரு தவறு நடந்ததால் கடுப்பில் இருந்தார் அவர். அந்த கோபத்தில் அவரும் ஒரு பெரிய தவறு செய்தார்.
ரோஹித் தடுமாற்றம்
ஏழாவது ஓவரில் தனக்கு வந்த கேட்ச் வாய்ப்பை அருகில் இருந்த ரிஷப் பண்ட், சிவம் துபே கேட்ச் பிடிப்பார்கள் என்று எண்ணி சரியாக முயற்சி செய்யாமல் கோட்டை விட்டார் ரோஹித் சர்மா.
மீண்டும் வந்த வாய்ப்பு
இந்த நிலையில், எட்டாவது ஓவரில் ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை சரியாக ஸ்டம்பிங் செய்தார் பண்ட். கள அம்பயர் அவுட் கொடுத்தாலும், முன்பு போல பண்ட் சொதப்பி இருக்கலாம் என கருதி, மூன்றாவது அம்பயருக்கு முடிவை அனுப்பி வைத்தார்.
மூன்றாவது அம்பயர்
மூன்றாவது அம்பயர் பல முறை ரீப்ளே செய்து பார்த்தார். பண்ட் நூலிழையில் விதிமீறலில் இருந்து தப்பியது தெரிந்தது. அதனால், நிச்சயம் அவுட் தான் என அனைவரும் முடிவு செய்து காத்திருந்தனர்.
தவறான தீர்ப்பு
பேட்ஸ்மேன் சௌம்யா சர்க்கார் தான் அவுட் என பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று விட்டார். அப்போது மூன்றாவது அம்பயர் நாட் அவுட் என திரையில் சிக்னல் காட்டினர்.
கடுப்பான ரோஹித்
அதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா வாயை விட்டு ஹிந்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தை ஒன்றை கூறி சத்தமாக திட்டினார்.
|
கள அம்பயர் மிரண்டார்
அப்போது கள அம்பயர் ரோஹித் சர்மாவுக்கு அருகே தான் நின்று இருந்தார். அவர் ரோஹித் மூன்றாவது அம்பயரை கெட்ட வார்த்தையில் விளாசியதை கேட்டு மிரண்டு போனார். மூன்றாவது அம்பயர் அவுட் என்ற பட்டனை அழுத்துவதற்கு பதில், நாட் அவுட் பட்டனை அழுத்தி விட்டார் என நான்காவது அம்பயர் மூலமாக உடனடியாக கூறப்பட்டது. சௌம்யா சர்க்கார் களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்பே குழப்பம் தீர்ந்தது.