முதல் டெஸ்ட் போட்டி
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இது தான் இந்திய டெஸ்ட் அணிகளிலேயே சிறந்த அணி என்ற பேச்சு இருக்கும் நிலையில், இந்தப் போட்டியில் மூத்த வீரர்கள் ஐந்து கேட்ச் வாய்ப்புக்களை கோட்டை விட்டனர்.
முதல் இன்னிங்க்ஸ் சொதப்பல்
அதிலும் வங்கதேச அணியின் முதல் இன்னிங்க்ஸில் மட்டும் நான்கு முறை கேட்ச்களை நழுவ விட்டது இந்தியா. அதில் மூன்று முறை தப்பித்தார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம். அப்படியும் அவரால் 43 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு வேளை அவர் அதிக ரன்கள் குவித்து இருந்தால் இந்த கேட்ச் நழுவல்கள் கடும் விமர்சனத்தை சந்தித்து இருக்கும்.
கோலி அதிர்ச்சி
வங்கதேச அணியின் முதல் இன்னிங்க்ஸில் உமேஷ் யாதவ் வீசிய 24வது ஓவரின் முதல் பந்தில் முஷ்பிகுர் ரஹீம் கொடுத்த கேட்ச்சை கேப்டன் விராட் கோலி ஸ்லிப்பில் நழுவ விட்டார்.
அடுத்து ரஹானே
அடுத்த நான்கு ஓவர்கள் கழித்து அஸ்வின் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் நின்று இருந்த துணை கேப்டன் ரஹானே எளிய கேட்ச்சை நழுவ விட்டார். இதில் ரஹீம் இரண்டாவது முறையாக தப்பித்தார்.
கடின கேட்ச்சை விட்ட சாஹா
அதன் பின் தொடர்ந்து ஆடி வந்தார் ரஹீம். அஸ்வின் வீசிய 40வது ஓவரில் அவரது கிளவுஸில் பட்டு வந்த பந்தை பிடிக்க முயன்ற சாஹா தோல்வி அடைந்தார். இது சற்றே கடினமான கேட்ச் தான் என்றாலும், விக்கெட் கீப்பர் இது போன்ற கேட்ச்களை பிடித்து தான் ஆக வேண்டும்.
மீண்டும் ரஹானே
44வது ஓவரில் மக்மதுல்லா கொடுத்த கேட்ச் ஒன்றை தவறவிட்டார் ரஹானே. இது ஒரே இன்னிங்க்ஸில் ரஹானே தவறவிட்ட இரண்டாவது கேட்ச் ஆகும். முதல் இன்னிங்க்ஸில் அஸ்வின் பந்துவீச்சில் மூன்று கேட்ச்களை நழுவ விட்டனர் இந்திய வீரர்கள்.
ரோஹித் சர்மா
பின்னர், இரண்டாம் இன்னிங்க்ஸில் 17வது ஓவரில் ஷமி பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஸ்லிப்பில் முஷ்பிகுர் ரஹீம் கொடுத்த கேட்ச்சை நழுவ விட்டார். இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. ரஹீம் நான்கு முறை கேட்ச்களில் தப்பி இருக்கிறார் என்பது நம்ப முடியாததாக இருந்தது. இந்த முறை அவர் 64 ரன்கள் எடுத்தார்.
ஜடேஜா முயற்சி தோல்வி
வங்கதேச வீரர் அபு ஜயீத் கொடுத்த கடினமான கேட்ச் ஒன்றை நழுவ விட்டார். சிறந்த பீல்டரான ஜடேஜாவும் கேட்ச் நழுவவிடும் கோதாவில் சேர்ந்தார். இந்தியா வெற்றி பெற்றதாலும், வங்கதேச வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காமல் போனதாலும், இந்த கேட்ச் நழுவல்கள் பேசுபொருளாக மாறவில்லை.
கவலை அளிக்கும் விஷயம்
எனினும், இது கவலை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது. இதே போன்ற தவறுகள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்து இருந்தால், அது இந்திய அணியின் தோல்விக்கு வழி வகுத்து இருக்கும்.
வங்கதேசம் செய்த ஒரே தவறு
இந்தியா ஐந்து எளிய கேட்ச்களை நழுவ விட்ட நிலையில், வங்கதேசம் ஒரே ஒரு கேட்ச்சை கோட்டை விட்டு, போட்டியில் மரண அடி வாங்கியது. அந்த அணி மயங்க் அகர்வால் 32 ரன்கள் எடுத்து இருந்த போது கொடுத்த எளிய கேட்ச்சை கோட்டை விட்டது. அவர் 243 ரன்கள் குவித்து அதை பயன்படுத்திக் கொண்டார்.