தவான் சிறப்பான பார்ம்
கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் சிறப்பான பார்மில் இருந்தார். அவர் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கங்குலி மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆலோசனைகளால் தன் பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்த அவர் நல்ல பார்மில் இருந்தார்.
உலகக்கோப்பை காயம்
அந்த பார்மை அடுத்த நடந்த உலகக்கோப்பை தொடரிலும் காட்டினார் தவான். உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி வந்த அவர் பாதி தொடரில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்
அதன் பின், காயம் குணமடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றார். டி20 தொடரில் தவான் ரன் குவிக்கத் திணறினார். அப்போது கோலி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பிக்கை அளித்தார்.
தென்னாப்பிரிக்கா டி20 தொடர்
அடுத்து தென்னாப்பிரிக்க டி20 தொடரில் 30, 40 ரன்கள் எடுத்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. தவான் ரன் குவிப்பதில் தடுமாற்றம் இருந்தது. அதனால், ஸ்ட்ரைக் ரேட் குறைவாகவே இருந்தது.
முதல் டி20
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தவான் மட்டுமே இந்திய அணியில் அதிக ரன் எடுத்த வீரர். அவர் 42 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதிக ரன் குவித்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் நூறுக்கும் கீழ் இருந்தது விமர்சனத்தை சந்தித்தது.
என்ன பிரச்சனை?
ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளைப் போலவே டி20 போட்டிகளிலும் துவக்கத்தில் சில பந்துகளை எடுத்துக் கொண்டு ஆடுகளத்தை புரிந்து கொள்ள முயல்கிறார். இது பல பேட்ஸ்மேன்களும் கையாளும் முறை தான். ஆனால், அதன் பின் அவரால் ரன் குவிப்பதில் வேகம் எடுக்க முடிவதில்லை.
ரோஹித்துக்கு பாதிப்பு
ரோஹித் சர்மாவும் அடித்து ஆடும் முன் துவக்கத்தில் சில பந்துகளை எடுத்துக் கொள்வார் என்பதால், ஒரே நேரத்தில் இந்திய அணியின் இரு துவக்க வீரர்களும் நிதான ஆட்டம் ஆடுவது டி20யில் பாதிப்பாக அமைகிறது. சில சமயம், இது ரோஹித் சர்மாவை விரைவாக அடித்து ஆட வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது. அதனால் தான் அவர் விரைவாக விக்கெட் இழக்கிறார் என்ற விமர்சனமும் உள்ளது.
கவாஸ்கர் எச்சரிக்கை
முன்னாள் வீரர் கவாஸ்கர் இது குறித்து பேசுகையில், "அடுத்த இரண்டு போட்டிகளில் தவான் சிறப்பாக ஆடவிட்டால் கேள்விகள் எழும். நீங்கள் 40 அல்லது 45 ரன்களை அதே அளவு பந்துகளை சந்தித்து எடுப்பதால் அணிக்கு எந்த பலனும் இல்லை. இதைப் பற்றி அவர் சிந்திக்க வேண்டும்" என்றார்.
2020 உலகக்கோப்பை அழுத்தம்
இந்திய அணி 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போது இருந்தே தயாராகி வருவதால் தவானுக்கு இப்போதே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதும் அவருக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
ரிஷப் பண்ட் ஆடினால்..
சில விமர்சகர்கள் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்டை துவக்க வீரராக ஆட வைத்தால் அது டி20யில் இந்திய அணிக்கு பெரிய மாற்றத்தை அளிக்கும் என கூறி வருவதையும் கேட்க முடிகிறது. தவான் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.