விளம்பர பதிவு
பிசிசிஐ தலைவர் ஆகும் முன் குறிப்பிட்ட ஒரு கிரிக்கெட் பேண்டசி விளையாட்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்த கங்குலி, தற்போது அது குறித்த ஒரு விளம்பர பதிவை தன் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இரட்டை ஆதாய சிக்கல்
பிசிசிஐ-யில் ஒருவர் இரண்டு பதவிகளில் இருந்தால் அது இரட்டை ஆதாயம் என்ற விதி அமலில் உள்ளது. அதனால், பதவியில் இருக்கும் எவரும், கிரிக்கெட் சார்ந்த வேறு எந்த பணிகளில் ஈடுபட்டால் அது இரட்டை ஆதாயம் என புகார் கூறப்பட்டு வருகிறது.
பல பணிகள்
பிசிசிஐ தலைவர் பதவிக்கு வரும் முன் கங்குலி கிரிக்கெட் வர்ணனையாளர், வேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பு தலைவர், ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர், ஒரு பேண்டசி கிரிக்கெட் விளையாட்டின் விளம்பர தூதர் என பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு இருந்தார்.
பேண்டசி கிரிக்கெட் விளம்பரம்
பிசிசிஐ தலைவர் ஆன பின் அவர் வேறு எந்த கிரிக்கெட் சார்ந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், சர்சைக்குரிய வகையில் பேண்டசி கிரிக்கெட் விளம்பரத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என்ன விளையாட்டு?
அந்த விளையாட்டில் ஒவ்வொரு போட்டிக்கும் முன் சிறப்பாக ஆடப் போகும் 11 வீரர்களை ஊக அடிப்படையில் ரசிகர்கள் தேர்வு செய்ய வேண்டும். போட்டியில் அவர்கள் சிறப்பாக ஆடினால் புள்ளிகள் கிடைக்கும். அதிக புள்ளிகள் பெற்ற ரசிகர்கள் பணம் வெல்லும் வாய்ப்பு உண்டு.
என்ன விளம்பரம்?
இந்த விளையாட்டில் கங்குலி தேர்வு செய்யும் 11 வீரர்களுக்கு சிறப்பு பரிசு என்ற ஒரு விளம்பரம் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பரவி வந்தது. முன்பு கங்குலி தன் சமூக வலைதளப் பக்கங்களில் இது குறித்து பதிவிட்டு வந்தார்.
|
ட்விட்டர் பதிவு
பிசிசிஐ தலைவர் ஆன பின் கங்குலி இந்தியா - வங்கதேசம் தொடருக்கான விளம்பரத்தை பகிர்ந்துள்ளார். அதில் இந்தியா - வங்கதேசம் மோதும் மூன்றாவது டி20 போட்டியில் என் 11 பேர் கொண்ட அணியை வீழ்த்துங்கள். பெரிதாக வெல்லுங்கள் என கூறப்பட்டு உள்ளது.
|
ரசிகர்கள் கேள்வி
பல இந்திய ரசிகர்கள் இந்த ட்விட்டர் பதிவின் கீழ் "கங்குலி, நீங்கள் இப்போது பிசிசிஐ தலைவர். இன்னும் இந்த விளம்பரத்தை செய்து வருகிறீர்களா?" என கேள்வி எழுப்பி உள்ளனர்.
விளக்கம் அளிப்பாரா?
இந்த பதிவு சர்ச்சையாக மாறி உள்ளது. கங்குலி இதுவரை இந்த விவகாரம் பற்றி எதுவும் பேசவில்லை. தற்போது இது குறித்த செய்திகள் பரவி வரும் நிலையில், விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.