பிம்பம் உடைப்பு
இந்திய மண்ணில் சுழற் பந்துவீச்சு தான் எடுபடும் என்று இருந்த பிம்பத்தை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் உடைத்து இருக்கிறது இந்திய வேகப் பந்துவீச்சு கூட்டணி. அஸ்வின், ஜடேஜாவுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்காதது தான் பரிதாபமாக இருந்தது. இருவரும் முதல் இன்னிங்க்ஸில் ஓடி, ஓடி பீல்டிங் செய்து கொண்டு இருந்தனர்.
வங்கதேசம் பேட்டிங்
பகல் - இரவு போட்டியாக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. பிங்க் பந்தால் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக இந்திய அணியின் மிரட்டல் வேகப் பந்துவீச்சால் தான் வங்கதேசம் திணறியது.
இஷாந்த் சர்மா அதிரடி
மூத்த வீரர் இஷாந்த் சர்மா முதல் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்த முடியாத நிலை இருந்தது. அவர் இரண்டாவது டெஸ்டில் துவக்கம் முதலே வேகத்தில் மிரட்டினார். 140 கிலோமீட்டர் வேகத்தில் பல முறை பந்து வீசிய அவர் 5 விக்கெட்களை சாய்த்தார். கோலி இவருக்கு 12 ஓவர்கள் அளித்தார்.
டபுள் விக்கெட் உமேஷ்
உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணிக்கு பெரிய முன்னிலையை பெற்றுத் தந்தார். அதனால், அவருக்கு 7 ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது.
மிரட்டல் ஷமி
ஷமி இரண்டு விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினாலும் இரண்டு பேட்ஸ்மேன்களை பவுன்சரில் தாக்கினார். அவர் 10.3 ஓவர்கள் வீசினார். 30.3 ஓவர்களில் வங்கதேசம் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில், 29.3 ஓவர்களை வேகப் பந்துவீச்சாளர்களே வீசினர்.
ஜடேஜாவுக்கு கிடைத்த ஒரு ஓவர்
சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜாவுக்கு ஒரே ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தார் கேப்டன் கோலி. அந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்த ஜடேஜாவுக்கு அதன் பின் ஓவர்கள் அளிக்கப் படவில்லை.
அஸ்வின் நிலை
அஸ்வினுக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஒரு ஓவர் கூட வீசவில்லை அஸ்வின். இந்திய மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி இருக்கும் அஸ்வின் ஒரு ஓவர் கூட வீசாதது ஆச்சரியத்தை அளித்தது.
இரண்டாம் இன்னிங்க்ஸ்
இரண்டாம் இன்னிங்க்ஸில் 23வது ஓவரை வீசும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு இன்னின்க்சையும் சேர்த்து 50 ஓவர்கள் சென்ற பின்னரே அஸ்வினுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைத்தது.
வேகப் பந்துவீச்சு ஆதிக்கம்
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளைப் போல இந்திய அணியிலும் வேகப் பந்துவீச்சாளர்கள் வங்கதேச டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.