என்ன கடிதம்?
தேசிய புலானய்வு அமைப்புக்கு சில நாட்கள் முன்பு பெயர் குறிப்பிடாமல் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் கேரளாவின் கோழிக்கோடு நகரத்தை சார்ந்து இயங்கும் "ஆல் இந்தியா லஷ்கர் - இ - தொய்பா" என்ற தீவிரவாத அமைப்பு சிலரை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
அரசியல் தலைவர்கள் பெயர்கள்
அந்த தீவிரவாத அமைப்பின் வரிசையில் யார் யார் இடம் பெற்றுள்ளனர் என்ற விவரமும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் பெயரும் அதில் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
விராட் கோலி பெயர்
அதில் கடைசியாக கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பெயரும் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலும், இது போன்ற எச்சரிக்கை கடிதங்களில் அரசியல் தலைவர்கள் பெயர்களே இடம் பெறும் நிலையில், கிரிக்கெட் வீரர் ஒருவரின் பெயரும் இடம் பெற்றதால் பரபரப்பு எழுந்தது.
உஷாராக இருக்கவும்
தேசிய புலனாய்வு அமைப்பு அந்த கடிதத்தை பிசிசிஐக்கு அனுப்பி இந்திய அணியின் பாதுகாப்பை அதிகரித்து உஷாராக இருக்குமாறு கூறி உள்ளது. குறிப்பாக, வங்கதேச கிரிக்கெட் தொடர் துவங்க இருக்கும் நிலையில், இந்த கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி போட்டி
இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டி டெல்லியில் வரும் நவம்பர் 3 அன்று துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை என்றாலும், டெல்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி இருக்கிறது.
தீவிரவாத அமைப்பு
பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் புதிய பெயர் தான் ஆல் இந்தியா லஷ்கர் இ தொய்பா என சில செய்திகள் குறிப்பிடுகின்றன. சிலர், இது போன்ற அமைப்பே இல்லை எனவும் கூறி வருகின்றனர்.
வதந்தியா?
டெல்லி காவல்துறை வட்டாரத்தில் இந்த கடிதம் வெறும் பரபரப்பை ஏற்படுத்த அனுப்பப்பட்ட வதந்தியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், எந்த மிரட்டலையும் சாதாரணமாக கருதக்கூடாது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஆய்வு
இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ள ஒவ்வொரு மைதானம் மற்றும் பங்கேற்க உள்ள ஒவ்வொரு வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடரில் கோலி
வங்கதேச டி20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 3 முதல் 10 வரை நடைபெற உள்ளது. அடுத்து நவம்பர் 14 மற்றும் 22 தேதிகளில் தொடங்கி இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. டி20 தொடரில் ஓய்வில் இருக்கும் விராட் கோலி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார்.
முக்கியமான கொல்கத்தா டெஸ்ட்
இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி இந்தியாவின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடக்க உள்ளது. இந்திய பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆகியோர் இந்தப் போட்டியை காண வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.