முதல் பகல் - இரவு டெஸ்ட்
இந்திய அணி ஆடும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா - வங்கதேசம் இரு அணிகளுக்குமே இது தான் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி.
ஒப்புக் கொண்ட கோலி
இந்த டெஸ்ட் போட்டியில் ஆட கடந்த நான்கு ஆண்டுகளாக மறுத்து வந்தது இந்திய அணி. கங்குலி பிசிசிஐ தலைவர் ஆனதும் முதல் வேலையாக கேப்டன் கோலியிடம் பேசி, பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு சம்மதம் வாங்கினார். கோலி எந்த எதிர்ப்பும் கூறாமல் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
பிங்க் நிற பந்து
பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் வழக்கமாக டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்தை பயன்படுத்த முடியாது. இரவு நேரத்திலும் கண்ணுக்கு தெளிவாக தெரியும் வகையிலான பிங்க் நிற பந்து தான் பயன்படுத்த வேண்டும்.
தீவிர பயிற்சி
பிங்க் நிற பந்துக்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அதிலும் இந்தியா ஒரு படி முன்னே தான் உள்ளது.
இடைவிடாத பயிற்சி
எந்த இடத்தையும் விடாமல், பீல்டிங், பேட்டிங், பந்துவீச்சு என ஒவ்வொரு வீரரும் இடைவிடாமல், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இருந்தே பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கோலி பேட்டி
நீண்ட பயிற்சிக்குப் பின் இந்தியா ஓரளவு பிங்க் பந்து குறித்த புரிதலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு முன் பேட்டி அளித்த கேப்டன் விராட் கோலி, பிங்க் பந்து குறித்த தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
கடைசி நேரம்
மாலை மற்றும் முன் இரவு நேரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது பிங்க் பந்தை பயன்படுத்துவது கடினம் என கூறப்படும் நிலையில், அதை ஒப்புக் கொண்டார் கோலி. எவ்வளவு ஈரப்பதம் இருக்கும் என்பதை முன்கூட்டியே எங்களால் கணிக்க முடியாது என்பதால் அது கவலை அளிக்கும் விஷயம் என்றார்.
உயரமான கேட்ச்
பிங்க் பந்தை பார்ப்பது கடினமாக இருப்பதால், அதிக உயரம் செல்லும் கேட்ச்களை பிடிப்பது கடினமாக மாறி இருக்கிறது என கூறினார் கோலி. இதற்கு பிங்க் பந்து பழையதாக மாறும் போது நிறத்தை இழப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.
பீல்டிங் கடினம்
அதே போல, பீல்டிங் செய்வது பிங்க் நிற பந்தில் கடினமாக இருப்பதாகவும், பிங்க் பந்து எடையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், அது பீல்டிங் செய்யும் போது கடினமாக உணரப்படுவதாக கூறினார்.
ஸ்லிப் கேட்ச் சிக்கல்
குறிப்பாக, ஸ்லிப் கேட்ச் பிடிக்கும் போது பந்து கையை பலமாக தாக்குவதாகவும், பவுண்டரி எல்லையில் இருந்து த்ரோ செய்யும் போது, பந்தை பிடிக்க கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் கோலி. கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ஐந்து கேட்ச்களை தவறவிட்ட நிலையில், இந்த செய்தி கவலை அளிப்பதாக உள்ளது.