டெஸ்ட் பந்து
பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகள் தான் பயன்படுத்தப்படும். 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளில் வெள்ளைப் பந்துகள் பயன்படுத்தப்படும். இந்த இரண்டு பந்துகளுக்குமே பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.
பிங்க் பந்தின் தன்மை
இந்த நிலையில், பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் இரவு நேரத்திலும் தெளிவாக தெரிய வேண்டும் என்ற நோக்கில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பந்துகள் சிவப்பு - வெள்ளை பந்துகளைக் காட்டிலும் வேறு மாதிரியாக செயல்படும் என கூறப்படுகிறது.
சாஹா என்ன சொன்னார்?
இந்தியா முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடினாலும், இந்திய வீரர்கள் சிலர் ஒன்றிரண்டு உள்ளூர் போட்டிகளில் பிங்க் பந்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே ஆடி உள்ளனர். அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹாவும் ஒருவர். அவர் தற்சமயம் இந்தியா செய்த பயிற்சிக்குப் பின், பிங்க் பந்து குறித்த தன் கருத்துக்களை விலாவாரியாக எடுத்துக் கூறினார்.
சாயங்காலம் ஆனால்..
"நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் குக்கபுர்ரா வகை பந்துகளை பயன்படுத்தி ஆடினோம். ஆனால், இப்போது எஸ்ஜி வகை பந்தை பயன்படுத்துகிறோம். சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால் அது லேசாக திரும்பும், ஆனால், சவாலான பகுதி என்றால் அந்தி மாலை நேரம் தான்" என்றார் சாஹா.
பேட்ஸ்மேன் நிலை
"பேட்ஸ்மேன்களுக்கு பந்தை சரியாக அடிப்பது கடினம். ஆனால், நாங்கள் அதற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. பந்துவீச்சாளர்கள் நிச்சயம் உதவுவார்கள்" என்றார் சாஹா.
பின்னணி திரை குழப்பம்
"நாங்கள் வெள்ளைப் பந்தில் ஆடும் போது எதிரே கருப்பு பின்னணி திரை இருக்கும். ஆனால், இப்போது (பிங்க் பந்து பயன்படுத்தும் நிலையில்) அந்த திரை வெள்ளையாக இருக்குமா கறுப்பாக இருக்குமா? எனத் தெரியாது. அது தான் எங்கள் கவலை" என்றார் சாஹா.
திரையால் பிரச்சனை
"அந்தி மாலை நேரத்தில் பந்து பழையதாக மாறி இருக்கும். அப்போது பின்னணி திரை தெளிவாக இல்லாவிட்டால், பேட்ஸ்மேனுக்கு மட்டும் அது கடினம் அல்ல, கீப்பர் மற்றும் ஸ்லிப் பீல்டர்களுக்கும் அது கடினம் தான். ஸ்கொயர் திசையில் நிற்கும் பீல்டருக்கும் பந்தை கண்டு பிடிப்பது சிக்கலாகத் தான் இருக்கும்" என்றார்
என்ன ஆகும்?
"வெள்ளைப் பந்து பழையதானால் அப்போதும் நாம் அதை வெள்ளைப் பந்தாகவே பார்க்க முடியும். ஆனால், பிங்க் பந்து பழையதானால் அது எப்படி நடந்து கொள்ளும் என்பது தெரியாது" என்று கூறினார் சாஹா.
பந்துவீச்சாளர்களை நம்பி இந்தியா
சாஹா இத்தனை சிக்கல்களை பட்டியல் இட்டாலும், இந்திய அணியின் பலமாக இருப்பது பந்துவீச்சாளர்கள் தான். பிங்க் பந்து பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுவதால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் அணியை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.