விமர்சனங்கள்
மத்திய பாஜக அரசு கல்வியில் காவியை புகுத்துவது போல, விளையாட்டிலும் புகுத்திவிட்டது என்று இணையதளங்களில் பலரும் கருத்து சொல்வதையும் பார்க்க முடிந்தது. ஆனால், இந்தப் போட்டி நடைபெற்ற, பிர்மிங்காம் மைதானத்தில், இங்கிலாந்து ரசிகர்களையும் விட அதிகமாக இந்திய ரசிகர்கள் தான் இருந்தனர்.
பொதுவாக ரசிகர்களில் கணிசமானோர், இந்திய ஜெர்சி அணிந்து கொண்டு ஆட்டத்தை பார்க்க வருவார்கள். இன்றும் அதே போல வந்து இருந்தனர். ஆனால் அனைவருமே இந்திய அணி வழக்கமாக அணியக் கூடிய நீல நிற ஜெர்சியைத்தான் அணிந்து இந்தியாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
காவி ஜெர்சி
காவி நிற வர்ணத்தில், உள்ள ஜெர்சியை அணிந்துதான், இந்திய வீரர்கள் இன்று ஆடுவார்கள் என்பது முன்னமே அறிவிக்கப்பட்ட ஒன்றுதான் என்றபோதிலும் கூட, மைதானத்திற்கு வந்து இருந்த ரசிகர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான், ஒரு சிலரே காவி ஜெர்சி ஆடைகளை அணிந்து இருந்தனர். இதைத் தவிர பெரும்பாலானோர் நீல நிற வண்ணத்தை தான் தேர்ந்தெடுத்திருந்தனர்.
கேப்டன் ஆதரவு
இதன் மூலம் ரசிகர்களுக்கு, உணர்விலேயே கலந்து போனது அந்த நீலநிற ஜெர்சி தான் என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூட, நீல நிறம்தான் இந்திய அணிக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும், இந்த புதிய வண்ணத்தில் ஒருநாள் ஆடுவதால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
நீல வண்ண கண்ணா வா
ரசிகர்களோ எங்களுக்கு தேவை, 'மென் இன் ப்ளூ' என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக சில ரசிகர்களிடம் கேட்டபோது, பொதுவாக இந்திய ஜெர்சியை ரசிகர்கள் வாங்கி வீட்டில் இருப்பு வைத்திருப்பார்கள். அதைத்தான் போட்டி நடக்கும்போது அணிந்து வருவார்கள். காவி நிற ஜெர்சி என்பது ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமேயானது, எனவே அதற்காக ஒரு ஆடையை வாங்கி விட்டு அது வீணாக வீட்டில் தூங்குவது தேவையற்றது என்பதால் வீண் செலவு எதற்கு என்று பல ரசிகர்களும் தவிர்த்து இருப்பார்கள் என்றும் ஒரு கருத்து தெரிவிக்கிறார்கள்.