பேட்டிங் சொதப்பல்
அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார். குறிப்பாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலியும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
பந்துவீச்சு
இந்திய அணியில் அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் சென்ற நிலையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் அரை சதம் கடந்தார். இதனால் இந்தியா 124 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி எளிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் 3 விக்கெட்டும், ரஷித், மார்க் வுட், ஜோர்டன், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஏமாற்றம்
இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் மொயீன் அலிக்கு நேற்றைய ஆட்டத்தில் வாய்ப்பளிக்கபடவில்லை. ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டனர். அந்தவகையில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு மொயீன் அலி கைக்கொடுக்க சென்றார். அப்போது ஆர்ச்சர் மொயீனை கண்டுக்கொள்ளாமல் அடில் ரஷித்துக்கு கைகொடுத்து தழுவிக்கொண்டார். இதனால் மொயீன் அலி ஏமாற்றமடைந்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி மொயீன் அலி ஒதுக்கப்பட்டாரா என பேசுப்பொருளை கிளப்பியுள்ளது.
பெஞ்சில் மொயீன்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது கொரோனா உறுதி செய்யப்பட்டs மொயீன் அலி, பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறக்கப்பட்டார். எனினும் அப்போட்டியுடன் அவர் சொந்த நாட்டிற்கு கிளம்பிவிட்டு தற்போது தான் டி20 போட்டிக்காக வந்துள்ளார். ஜோப்ரா ஆர்சர் மொயீன் அலியை ஒதுக்கியது தெரிந்து செய்தாரா அல்லது, தெரியாமல் செய்தாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.