விஜய் ஷங்கர் மோசம்
விஜய் ஷங்கர் உலகக்கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் பங்கேற்றார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என மூன்று அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போட்டியில் சொற்ப ரன்களே எடுத்தார். அவர் அவுட்டான ஷாட்களும் விமர்சனத்துக்கு உள்ளானது. பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்து விட்டார் என விமர்சகர்கள் கூறினர்.
வாய்ப்பு கிடைக்காத ரிஷப் பண்ட்
விஜய் ஷங்கரை நீக்கி விட்டு, ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. முன்னாள் இந்திய வீரர்கள் மட்டுமின்றி, பல நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்களும் ரிஷப் பண்ட்டை ஏன் கோலி அணியில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பி வந்தனர்.
பீட்டர்சன் பதிவு
முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், ட்விட்டரில் கிண்டலாக ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். விஜய் ஷங்கரை நீக்க வேண்டாம். அவர் அடுத்த போட்டியில் மிக சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடிக் கொடுப்பார். ரிஷப் பண்ட் பற்றி யோசிக்காதீர்கள். அவர் இன்னும் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகவில்லை என்று கூறி இருந்தார்.
போட்டிக்கு முன் விவாதம்
இந்த நிலையில், இங்கிலாந்து போட்டி துவங்க ஒரு மணி நேரம் இருக்கும் முன் வர்ணனை செய்ய வந்த கெவின் பீட்டர்சனும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். இருவரும் என்ன பேசினார்கள் என்று பீட்டர்சனிடம் கேட்ட போது, நாங்கள் லண்டன் வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டு இருந்தோம் என பூசி மெழுகி விட்டு சென்றார்.
எப்படி நடந்தது மாற்றம்?
நிச்சயம் பீட்டர்சன் - கோலி, ரிஷப் பண்ட் குறித்து தான் பேசி இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதுவும் போட்டி துவங்க ஒரு மணி நேரம் அவர்கள் பேசியதை வைத்துப் பார்த்தால், கோலி, பீட்டர்சனின் கிண்டல் பதிவால் பாதிக்கப்பட்டு, ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்திருக்கலாம். எனினும், இந்த மாற்றம் குறித்து கோலி டாஸின் போது பேசுகையில், விஜய் ஷங்கருக்கு காலில் லேசான காயம் இருப்பதால், அவருக்குப் பதில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார்.