நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது.
இக்கட்டான நிலை
இந்த நிலையில், தொடரில் 0 - 1 என பின்தங்கி உள்ள இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால், ஒருநாள் தொடரை தொடர்ந்து, டெஸ்ட் தொடரையும் வைட்வாஷ் ஆகி இழக்கும்.
அஸ்வின் நிலை
முதல் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், பேட்டிங்கில் வெறும் 4 ரன்கள் தான் எடுத்தார். அவர் ஓரளவு பேட்டிங் செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இது ஏமாற்றமாக இருந்தது. அவர் மீது அதிருப்தியில் இருந்தனர் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இஷாந்த் சர்மா காயம்
அஸ்வின் நீக்கப்படலாம் என்ற தகவல் வந்த அதே நேரத்தில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக பயிற்சி செய்யவில்லை. அவருக்கு வலது காலில் ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வலி வந்தது. அதனால், அவர் இரண்டாவது டெஸ்டில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது.
உமேஷ் யாதவ்
இஷாந்த் சர்மாவுக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். இவர் இந்திய மண்ணில் கலக்கினாலும், வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அதனால், அவரை தேர்வு செய்வது இந்திய அணிக்கு உதவுமா? என்ற சந்தேகம் இருந்தது.
ஜடேஜா தேர்வு
இதற்கிடையே அஸ்வினுக்கு பதில் ரவீந்திர ஜடேஜா அணியில் தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த சில போட்டிகளில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதே இந்த தேர்வுக்கு முக்கிய காரணம். ஜடேஜா சிறந்த வீரர் என்றாலும், அஸ்வின் நீக்கம் அதிர்ச்சியாக அமைந்தது.
அதிக விக்கெட் எடுத்தவர்கள்
முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா, ஷமி என இரண்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த திணறினர். அந்தப் போட்டியில் இஷாந்த் சர்மா 5, அஸ்வின் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இப்படி அதிக விக்கெட் வீழ்த்திய இருவரும் அடுத்த போட்டியில் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அஸ்வின் நீக்கம் சரியா?
இஷாந்த் சர்மா காயத்தால் நீக்கப்பட்டார். அவரை நீக்கும் முடிவு என்பது வேறு வழியின்றி எடுக்கப்பட்டது. ஆனால், அஸ்வினை அணியில் தேர்வு செய்து இருக்கலாம். அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் எட்டாவது பேட்ஸ்மேனுக்கு என்ன அவசியம்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நியூசிலாந்து டாஸ் வெற்றி
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா முதல் போட்டியில் சொதப்பி இருந்தாலும், இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். புஜாரா நம்பிக்கை அளித்தார். எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் தான் ஆடினர்.