டி20 தொடர் வெற்றி
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் முதலில் நடைபெற்றது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு திட்டமிட்டு தயாராகி வரும் இந்திய அணி அந்த தொடரில் 5 - 0 என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, அசத்தியது. இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவர் வரை சென்றும் வெற்றி பெற்றது.
ஒருநாள் தொடர் தோல்வி
அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்த தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. சுமார் 31 ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் தொடரில் வைட்வாஷ் தோல்வியை பெற்றுள்ளது.
கடும் விமர்சனம்
இந்த நிலையில், இந்திய அணி மீது கடும் விமர்சனம் உள்ளது. அணித் தேர்வில் கேப்டன் கோலி சரியாக செயல்படவில்லை, பும்ரா மற்றும் கோலி இந்த தொடரில் சரியாக செயல்படவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு இந்திய அணி சார்பில் பதில் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், சாஹல் அதிரடி பேட்டி கொடுத்துள்ளார்.
சாஹல் பேச்சு
மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்த பின் நடத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சாஹல் இது பெரிய தோல்வி இல்லை என்பது போல பேசினார். எல்லா போட்டிகளையும் வெல்ல முடியாது என்றார் அவர். ஒரு தொடரை வென்றோம், ஒரு தொடரில் தோற்றோம் என சாதராணமாக பேசினார்.
என்ன சொன்னார்?
"ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் நான்காவது அல்லது ஐந்தாவது தொடர் தோல்வி ஆகும். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் வெல்ல முடியாது. நாங்கள் ஒரு தொடரை வென்றுள்ளோம், மற்றொன்றை இழந்துவிட்டோம். எனவே இது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டியதில்லை: என்றார் சாஹல்
கோலி சமாளிப்பு
கேப்டன் கோலியும் இது பெரிய விஷயம் இல்லை என்பதைப் போலவே இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த பின் பேசினார். அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், ஒருநாள் போட்டிகள் அத்தனை முக்கியமல்ல. டி20, டெஸ்ட் போட்டிகள் தான் முக்கியம் என கூறி இருந்தார்.
டி20 உலகக்கோப்பை
அடுத்து டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்தியா ஆடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பெற்று வருகிறது. அதனால், ஒருநாள் போட்டிகள் அத்தனை முக்கியமல்ல என்று கூறி இருக்கிறார் கோலி.