போட்டியில் பரபரப்பு
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி 5 ரன்களுக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுலை இழந்தது. பின்னர் மிடில் ஆர்டரும் சொதப்ப, கடைசி நேரத்தில் தோனி, ஜடேஜா கூட்டணி அமைத்து அணியை மீட்டனர். ஜடேஜா 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
தோனி மட்டுமே நம்பிக்கை
கடைசியில் தோனி மட்டுமே அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்தார். 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் 49வது ஓவரை எதிர்கொண்டு ஆடினார் தோனி. முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பந்தில் இரண்டு ரன் ஓட முயன்றார்.
ரன் அவுட்
தோனி ஒரு ரன் ஓடி முடித்து, இரண்டாம் ரன் ஓடி வரும் போது, மார்டின் குப்டில்-இன் அருமையான த்ரோவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். தோனி அவுட் ஆன உடன் இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்க்கப்பட்டது.
— Cricket 🏏 (@CrichdC) July 10, 2019 |
ஆறு பீல்டர்கள்
இந்த நிலையில், இணையத்தில் வெளியான சில புகைப்படங்கள், வீடியோக்களால் தோனி ரன் அவுட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. தோனி ஆட்டமிழந்த பந்தை வீசும் போது நியூசிலாந்து அணியின் ஆறு பீல்டர்கள் உள்வட்டத்துக்கு வெளியே நின்று இருந்தார்கள்.
|
விதி என்ன?
விதிப்படி ஐந்து பீல்டர் தான் அதிகபட்சம் உள்வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். ஆனால், நியூசிலாந்து அணியில் ஆறு பீல்டர்கள் வெளியே நின்று இருந்தனர். எனவே, இது நோ பால் ஆகும். அதனால், பல ரசிகர்கள் தோனி நோ பாலில் ரன் அவுட் செய்யப்பட்டார் என கூறி வருகிறார்கள்.
தோனி அவுட்டா?
ஆனால், நோ பாலில் ரன் அவுட் செய்யப்பட்டாலும் அவுட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி அவுட் என்ற தீர்ப்பில் சிக்கல் இல்லை. ஆனால், அது நோ பால். இதில் ஒரு விஷயம் உள்ளது. ஒரு வேளை சரியான பீல்டிங் நிறுத்தப்பட்டு இருந்தால், தோனி அடித்த பந்தை பிடித்தது, ரன் அவுட் செய்தது போன்ற சம்பவங்கள் நடக்காமல் போயிருக்கலாம்.