இந்தியா சறுக்கல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்தது. முதல் மூன்று விக்கெட்களை 5 ரன்களுக்கு இழந்த இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.
தோனி பேட்டிங்
பேட்டிங்கில் ஏழாவது வரிசையில் இறங்கிய தோனியும், எட்டாவது வரிசையில் இறங்கிய ஜடேஜாவும் தான் அணியை காப்பாற்றி வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். எனினும், இவர்கள் இருவரும் கடைசி கட்டத்தில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது. தோனி 50 ரன்களும், ஜடேஜா 77 ரன்களும் குவித்தனர்.
சச்சின் கருத்து
தோனியை ஏன் முன்பே களமிறக்கவில்லை என்பது குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், சச்சினும் தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்திய அணி விக்கெட்களை விரைவாக இழந்த இது போன்ற தருணங்களில் தோனியை முன்பே களமிறக்கி இருக்க வேண்டும். இறுதிக் கட்டத்தில் அவர் ஜடேஜாவுடன் பேசினார். போட்டியின் போக்கை கட்டுப்படுத்தினார். மிகவும் சாமர்த்தியமாக ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருந்தார் என்றார்.
நிச்சயம் செய்திருப்பார்
தோனிக்கு முன்பே தினேஷ் கார்த்திக், ஹர்திக் பண்டியா களமிறங்கியதையும் விமர்சித்தார். ஹர்திக் பண்டியாவிற்கு பதில், தோனி ஐந்தாம் இடத்தில் களமிறங்கி இருக்க வேண்டும். அது வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும். தோனி நிச்சயம் ஏதேனும் செய்து இருப்பார் என்றார் சச்சின்.
கங்குலி சொன்ன காரணம்
கங்குலி கூறுகையில், தோனி முன்பே இறங்கி இருக்க வேண்டும். அவரது பேட்டிங் மட்டுமல்ல, அவரது இருப்பும் அங்கே முக்கியம். அவர் வேகமாக விக்கெட்கள் விழாமல் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார். பண்ட் ஆடும் போது தோனி இருந்திருந்தால், பண்ட் அந்த மோசமான ஷாட் ஆடாமல் பார்த்துக் கொண்டு இருப்பார் என்றார்.
கோட்டை விட்ட கோலி
தோனியின் தனிப்பட்ட பேட்டிங்கை மட்டும் பார்த்த விராட் கோலி, அவர் களத்தில் நின்று இருந்தால், மற்ற இளம் பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக ஆடி இருப்பார்கள் என்பதை மறந்து விட்டார். அது தான் போட்டியில் பெரும் பின்னடைவாக அமைந்தது.