தோல்வி அடையாத அணிகள்
இந்தப் போட்டிக்கு முன் உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா தான் ஆடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. நியூசிலாந்து அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. எனவே, லீக் சுற்றில் இதுவரை தோல்வி அடையாத இரு அணிகள் சந்திக்க உள்ளன என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
சம பலம் கொண்ட அணிகள்
மேலும், இந்தியா - நியூசிலாந்து அணிகள் சம பலம் கொண்ட அணிகளாக கருதப்பட்டது. இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்கக் கூட முடியாத அளவு இரு அணிகளும் உலகக்கோப்பை லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தது.
மழை பெய்து வந்தது
ஆனால், இந்த போட்டி நடைபெற இருந்த ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக சூரியனே வெளியே வரவில்லை. அந்த அளவு மேக மூட்டமாகவும், மழை பெய்தும் வந்தது.
வெற்று நம்பிக்கை
போட்டி அன்று மழை பெய்யாது என வெற்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், போட்டி நாள் அன்று காலை முதலே மழை பெய்து வந்தது. போட்டிக்கு சில மணி நேரம் இருக்கும் போது மழை நின்றது. இதனால், போட்டி சில மணி நேரம் தாமதமாக தொடங்கும் என கூறப்பட்டது.
உள்ளே - வெளியே
ஆனால், பின் மீண்டும் மழை வருவதும், போவதுமாக இருந்தது. மைதான ஊழியர்கள் கவர்கள் கொண்டு ஆடுகளத்தை மூடுவதும் திறப்பதுமாக இருந்தனர். அம்பயர்கள் மைதானத்தை சோதனை செய்கிறேன் என சுமார் ஐந்து முறை மைதானத்திற்குள் உள்ளே - வெளியே ஆடினர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
போட்டி எப்படியாவது தொடங்கி விடும் என ஆவலில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மழை வரும் என தெரிந்தும் இங்கிலாந்தில் போட்டிகளை திட்டமிட்டது ஏன் என ஐசிசியை வறுத்து எடுத்தனர் ரசிகர்கள்.
கைவிடப்பட்டது
பின்னர், 7.30 மணிக்கு வந்த அம்பயர்கள் போட்டி கைவிடப்பட்டது என அறிவித்தனர். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்தியா அடுத்து மோதவுள்ள, மிக முக்கியமான போட்டியான பாகிஸ்தான் போட்டியிலும் மழை வரும் என கூறப்படுகிறது.