ரசிகர்கள் ஆவல்
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன லீக் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் ஆவலோடு கூடி இருந்தனர்.
ரசிகர்கள் நம்பிக்கை
ஆனால், போட்டி நீண்ட நேரமாக துவங்கவில்லை. மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. அந்த கொட்டும் மழையிலும் ரசிகர்கள் போட்டி துவங்கி விடும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மழை சில சமயம் நின்றாலும், அவுட் பீல்டு மோசமாக இருந்ததால், போட்டியை துவக்க முடியவில்லை.
தோனி கோஷம்
ஒரு கட்டத்தில் போட்டி நடக்க வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்த சில ரசிகர்கள், தோனியை மட்டுமாவது பார்த்துவிட்டு போகலாம் என இந்திய அணியின் அறையை நோக்கி "தோனி, தோனி" என கோஷம் எழுப்பினர்.
ரவி சாஸ்திரி
அந்த அறைக்கு வெளியே இருந்த பால்கனியில் ஜடேஜா, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் நின்று கொண்டு இருந்தனர். ரசிகர்கள் இடை விடாமல் கோஷம் போடவே, ரவி சாஸ்திரி ஒரு காமெடி செய்தார்.
மொக்கை காமெடி
"உங்களுக்கு தோனி தானே வேண்டும். இதோ பாருங்க" என தோனியின் 7ஆம் எண் ஜெர்சியை தூக்கி காண்பித்து, மொக்கையாக காமெடி செய்தார். போட்டியை காண முடியாத ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள், ரவி சாஸ்திரியின் மொக்கை காமெடியால் மேலும் வெறுப்பு அடைந்தனர்.
ரத்து
அதன் பின் இந்திய நேரப்படி சுமார் 7.30 மணி அளவில் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர் அம்பயர்கள். இதனால், இந்தியா - நியூசிலாந்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்தியா ஏற்கனவே 4 புள்ளிகள் பெற்ற நிலையில், தற்போது 5 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி
இந்தியா அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரும் ஜூன் 16 அன்று விளையாட உள்ளது. அந்த போட்டியில் மழை வராமல் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.