இந்தியா சேஸிங் சொதப்பல்
அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 239 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி துவக்கத்திலேயே தடுமாறியது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் மூவரும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஏழாவது இடத்தில் தோனி
மூன்று விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், நான்காம் இடத்தில் ரிஷப் பண்ட், அதற்கு அடுத்த இடங்களில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பண்டியா களமிறங்கினர். தோனி ஏழாவது வரிசையில் களமிறங்கினார். ரிஷப் பண்ட் வரை களமிறங்கியது கூட சரிதான். அதன் பின் தோனியை ஏன் களமிறக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
கோலி சொன்ன காரணம்
அரையிறுதிப் போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விராட் கோலி. அப்போது அவர் சொன்ன பதில் - "முதல் சில போட்டிகளுக்குப் பின் தோனிக்கு பின் வரிசை வீரர்களுடன் விளையாட முடிவு செய்யப்பட்டு இருந்தது. அது தான் திட்டம். தோனி, ஜடேஜாவுடன் பேட்டிங் செய்வார் என்று நினைத்தேன். அணியில் நல்ல சமநிலை இருந்தது. ஒருவர் அடித்து ஆடும் போது, மற்றொருவர் நிதானமாக ஆடலாம்"
முன்பே இறங்கி இருந்தால்..
தோனி நிதானமாகத் தான் ஆடப் போகிறார் என முடிவெடுத்த பின் நான்கு விக்கெட் வீழ்ந்த பின்னரே அவரை களமிறக்கி இருக்கலாமே. அவர் பொறுமையாக ஒருபுறம் ஆட ரிஷப் பண்ட், ஹர்திக் பண்டியா போன்ற அதிரடி வீரர்கள் மற்றொரு புறம் அடித்து ஆடி இருக்கலாம். அதே போல, ஜடேஜா கடைசி நேரத்தில் கை கொடுத்து இருப்பார்.
எங்கேயோ உதைக்குதே!
ஆனால், விராட் கோலி சொன்ன காரணம் மிகவும் மொக்கையாக இருந்தது. நிச்சயம் தோனியை ஓரங்கட்டியது போன்றே இருந்தது. தோனி ஏழாவது வரிசையில் இறங்கினாலும் பொறுப்பாக ஆடினார். அவர் நிதானம் காட்ட, ஜடேஜா அதிரடியாக ஆட இந்தியா வெற்றிக்கு மிக அருகே சென்று அவமானம் அடையாமல் தப்பித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.