முதல் டி20 போட்டி
நியூசிலாந்து நாட்டில் இந்திய அணி நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நீண்ட தொடரின் துவக்கமாக முதல் டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய ரசிகர்கள்
இந்தப் போட்டியைக் காண இந்திய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். போட்டி துவங்கிய போது கிட்டத்தட்ட மைதானம் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற ஆடை தான் தெரிந்தது. இந்தியாவில் ஆடும் போட்டி போல இருந்தது அந்த சூழல்.
அதிரடி ஆட்டம்
இந்த நிலையில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 203 ரன்கள் குவித்தது. ஆக்லாந்து மைதானத்தில் பவுண்டரி எல்லை சிறியது என்பதால் அந்த அணி அதிரடி ஆட்டம் ஆடியது. இந்திய அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது.
பும்ரா
பும்ரா கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்து அணியை 203 ரன்களுடன் கட்டுப்படுத்தினார். 204 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அந்த மைதானத்தில் இது எட்டக் கூடிய இலக்கு தான் என்றாலும் இந்திய அணி வெல்லுமா? என்ற சந்தேகம் இருந்தது.
இந்திய அணியின் சிக்கல்
இந்திய அணி கடந்த ஐந்து நாட்கள் முன்பு தான் இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை ஆடி முடித்து இருந்தது. அடுத்து இடைவெளி இல்லாமல், நியூசிலாந்து கிளம்பிச் சென்று, அங்கே உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் இந்தப் போட்டியில் ஆடியது.
இந்தியா வெற்றி
எனினும், சிறப்பாக ஆடிய ராகுல் 56, கோலி 45, ஸ்ரேயாஸ் ஐயர் 58* இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்தப் போட்டியின் முடிவில் பேசிய கேப்டன் கோலி, சொந்த மண் போல இந்திய ரசிகர்கள் அளித்த சூழல் தான் இத்தனை பெரிய இலக்கை எட்ட உதவியது என குறிப்பிட்டார்.