ஒருநாள் தொடர்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டி20 தொடரில் 5 - 0 என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியா தோல்வி
ஆனால், எதிர்பாராத வகையில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. தொடரை 2 - 0 என இழந்தது. இந்திய அணி மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலை உருவானது.
தோல்விக்கு காரணம்
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோற்க முக்கிய காரணம் மோசமான பந்து வீச்சு தான். இரண்டு போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்துவதும், ரன்னைக் கட்டுப்படுத்துவதும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலாக இருந்தது. முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவும் தவித்தது அதிர்ச்சி அளித்தது.
பும்ரா நிலை
பும்ரா காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி வந்துள்ளார். அவர் முன்பு போல பந்து வீசவில்லை. முதல் போட்டியில் ஓரளவு ரன்களைக் கட்டுப்படுத்திய அவர், இரண்டாவது போட்டியில் விக்கெட்டும் வீழ்த்த முடியாமல், ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமலும் தவித்தார்.
வாரி இறைக்கும் ஷர்துல் தாக்குர்
ஷர்துல் தாக்குர் இரண்டு போட்டிகளிலும் ரன்களை வாரி இறைத்தார். முதல் போட்டியில் 9 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்த அவருக்கு, இரண்டாவது போட்டியில் வாய்ப்பு அளித்தார் கேப்டன் கோலி. இது கடும் விமர்சனத்தை எழுப்பியது.
ஷமி ஓய்வு
குறிப்பாக, முகமது ஷமிக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு அளித்தார் கேப்டன் கோலி. அவருக்கு பதில் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டார். அப்போதே, பலரும் ரன்களை வாரி இறைக்கும் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு அளித்து இருக்கலாமே என கேள்வி எழுப்பினர்.
மூன்றாம் போட்டியிலும் ஓய்வு
இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ஷமி அணியில் சேர்க்கப்படவில்லை. இந்தப் போட்டியிலும் ஷர்துல் தாக்குர் தொடர்ந்து அணியில் இடம் பெற்றார். ஷமி டெஸ்ட் தொடரில் ஆட இருப்பதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்கள் உள்ளது
ஆனால், ஒருநாள் தொடர் முடிந்து பத்து நாட்கள் கழித்தே டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. டெஸ்ட் தொடர் துவங்க நீண்ட நாட்கள் இருக்கும் நிலையில், ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் ஏன் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என்ற கேள்வி விமர்சகர்களால் கேட்கப்படுகிறது.
|
ரசிகர்கள் கேள்வி
ஷமியை விட ஷர்துல் தாக்குருக்கு அணியில் அதிக முக்கியத்துவம் அளிப்பது ஏன்? பேட்டிங் ஆர்டரில் கூடுதல் பேட்ஸ்மேன் தேவை என்பதால் தாக்குர் அணியில் சேர்க்கப்படுகிறாரா? அது வேலைக்கு ஆகாது. ஷமியை அணியில் தேர்வு செய்யுங்கள் என்று சில ரசிகர்கள் கூறி உள்ளனர்.
மூன்றாவது போட்டி
மூன்றாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மயங்க் அகர்வால், விராட் கோலி ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ராகுல் சதம் அடித்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 62, மனிஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்தனர்.