முதல் ஒருநாள் போட்டி தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்த போதும், மோசமான பந்து வீச்சின் காரணமாக தோல்வி அடைந்தது. குறிப்பாக, இரண்டு பந்துவீச்சாளர்கள் 80 ரன்கள் வரை ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
ஷர்துல் தாக்குர் படுமோசம்
ஷர்துல் தாக்குர் 9 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி 80 ரன்கள் கொடுத்து இருந்தார். அவரது பந்து வீச்சு டி20 போட்டிகளில் சிறப்பாக இருந்த போதும், ஒருநாள் போட்டியில் மிக மோசமாக இருந்தது. அவர் ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான எகானமி வைத்துள்ளவர்களில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
வாரி இறைத்த குல்தீப் யாதவ்
மறுபுறம், குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் பந்து வீசி 84 ரன்கள் கொடுத்தார். அவர் கடந்த சில மாதங்களாக மோசமான பார்மில் தான் இருக்கிறார். சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். இந்தப் போட்டிக்கு பின்னும் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.
அணி மாற்றம் தேவை
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் இருவரும் நீக்கப்படுவார்கள் என்றே பலரும் கூறினர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் தப்பித்தார்.
கோலி செய்த மாற்றம்
கேப்டன் கோலி அதிரடியாக குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமியை நீக்கினார். அவர்களுக்கு பதில் சாஹல் மற்றும் நவ்தீப் சைனி அணியில் இடம் பெற்றனர். ஷர்துல் தாக்குர் அணியில் தொடர்ந்து இடம் பெற்றார். இது எதிர்பாராத மாற்றமாக அமைந்தது.
அதிர்ந்த ரசிகர்கள்
ஏற்கனவே, மோசமான பந்து வீச்சால் முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, அடுத்த இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற நிலையில், அனுபவம் வாய்ந்த ஷமியை நீக்கியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஷர்துல் தாக்குரை நீக்கி இருக்கலாமே? ஷமியை ஏன் நீக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.
கோலி சொன்ன காரணம்
கேப்டன் கோலி, இந்த மாற்றம் குறித்து அறிவித்த போது அதற்கான காரணத்தையும் கூறினார். ஒருநாள் தொடர் முடிந்த உடன் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அதில் ஷமி முக்கிய வீரராக இருப்பார் என்பதால், ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டெஸ்ட் தொடர் முக்கியம்
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கம் என்பதால் அதில் பெரும் வெற்றிகள் மிக முக்கியமானது. அதனால் தான், கோலி ஒருநாள் தொடரை விட டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளித்து, முக்கிய பந்துவீச்சாளரான ஷமியை நீக்கி இருக்கிறார்.
ஒருநாள் தொடர் நிலை?
அதே சமயம், ஒருநாள் தொடரில் அடுத்த இரு போட்டிகளில் ஷமி இல்லாத நிலையில், பும்ரா மட்டுமே வேகப் பந்துவீச்சில் அனுபவ பந்துவீச்சாளராக விளங்குகிறார். நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர் இருவருமே அனுபவம் குறைந்த வீரர்கள். அதனால், அது இந்திய அணிக்கு பாதிப்பாக அமைய வாய்ப்பு உள்ளது.
டாஸ் வெற்றி
இரண்டாவது போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆக்லாந்து ஆடுகளம் சிறிய பவுண்டரிகள் கொண்டது என்பதால், சேஸிங் செய்ய எளிதாக இருக்கும் என்ற நிலை உள்ளது. அதை மனதில் வைத்தே கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.