முதல் டெஸ்ட்
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்திய அணி மிக மோசமாக செயல்பட்டது.
பேட்டிங் சறுக்கல்
குறிப்பாக பேட்டிங் பரிதாப நிலையில் இருந்தது. சிறந்த அனுபவ வீரர்களான புஜாரா, கோலி ஆகியோரே நியூசிலாந்து வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர். மயங்க் அகர்வால், ரஹானே மட்டுமே கொஞ்சம் நம்பிக்கை அளித்தனர்.
பேட்டிங்கில் தடுமாற்றம்
முதல் டெஸ்ட் நடந்த ஆடுகளத்தில் பந்து முழுதாக பவுன்ஸ் ஆகவில்லை. அதே சமயம், ஷார்ட் பால்களை அடிக்கவும் முடியவில்லை. அதனால், நீண்ட நேரம் பந்தை அடிக்காமல் விட்ட இந்திய வீரர்கள், பொறுமை இழந்து தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சு சுமார்
அடுத்து பந்து வீச்சும் சுமாராக இருந்தது. நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது, 225 ரன்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள், அடுத்த மூன்று விக்கெட்களை வீழ்த்தும் முன் 123 ரன்கள் விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
விக்கெட் வீழ்த்த திணறல்
இந்திய அணி விக்கெட் வீழ்த்துவதில் திணறியது. இஷாந்த் சர்மா மட்டுமே சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா, ஷமி இருவரும் அவர்களின் சிறப்பான பந்துவீச்சை அளிக்கவில்லை. சுழற் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத நிலையில் அஸ்வின் ரன்கள் கொடுத்தாலும் 3 விக்கெட் எடுத்தார்.
ரஷீத் லத்தீப் விமர்சனம்
இந்த நிலையில், இந்திய அணியின் செயல்பாட்டை விமர்சித்து இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் ரசீத் லத்தீப். அவர் பேட்டிங்கில் என்ன தவறு நடந்தது என்பது பற்றியும், பும்ரா, ஷமிக்கு ஏன் அதிக விக்கெட் கிடைக்கவில்லை என்பது பற்றியும் கூறி உள்ளார்.
இயல்பான ஆட்டம் இல்லை
"வெளிநாடுகளில் இந்தியாவின் ரெக்கார்டு அத்தனை சிறப்பாக இல்லை. இந்தியா அதன் இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை. இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் அவர்கள் உள்ளே சிக்கி மூழ்கி விட்டார்கள். இந்தியா இப்படி ஆடும் அணி இல்லை" என்று கூறி இருக்கிறார் ரஷீத் லத்தீப்.
பேட்டிங் தவறு
மேலும், "நிறைய பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்காமல் விட்டால், தொடர்ந்து பந்துகளை அடிக்காமல் விட்டால், உங்கள் பெயரை ஏந்திக் கொண்டு ஒரு பந்து வரும்" என இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை அடிக்காமல் விட்டு, ஆட்டமிழந்ததை சுட்டிக் காட்டினார்.
பவுலிங் தவறு
"நியூசிலாந்து ஆடுகளத்தில் உமேஷ் யாதவ் சிறப்பாக ஆடி இருப்பார். பும்ரா ஷமி தொடர்ந்து ஸ்டம்ப்பையே குறி வைத்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து ஸ்விங் மற்றும் ஸீம்-ஆனால் அவுட் சைடு ஆஃப் திசையில் பந்து வீசி, பேட்ஸ்மேனை அடிக்க வைக்க வேண்டும்" என பந்துவீச்சில் நடந்த தவறை சுட்டிக் காட்டினார் ரஷீத்.
மாற்றிக் கொள்ளுமா இந்திய அணி?
ரஷீத் லத்தீப் சுட்டிக் காட்டிய இதே தவறுகளை பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர். இந்திய வீரர்கள் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்குள் தங்கள் தவறுகளை உணர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக பேட்டிங் நிச்சயம் முன்னேற வேண்டும்.