விக்கெட் கீப்பர் இடம்
2019 உலகக்கோப்பை தொடர் முதல் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் இடம் யாருக்கு என்ற கேள்வி உள்ளது. தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அந்த இடத்தில் ஆடி வந்தார்.
ரிஷப் பண்ட் சொதப்பல்
ஆனால், ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் சொதப்பி வந்தார். அதை மீறியும் அவருக்கு பல தொடர்களில் வாய்ப்பு அளித்து வந்தது இந்திய அணி நிர்வாகம். ஆனால், இடையே ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்தார் பண்ட்.
மாற்று விக்கெட் கீப்பர்
ரிஷப் பண்ட் காயம் அடைந்த போது மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார் கேஎல் ராகுல். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவரது விக்கெட் கீப்பிங் அபாரமாக இருந்தது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து டி20 தொடரிலும் ராகுல் விக்கெட் கீப்பராக தொடர்ந்தார்.
அபார செயல்பாடு
ராகுல் டி20 தொடரில் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டார். ஒவ்வொரு போட்டியிலும் தன் முத்திரையை பதித்தார். குறிப்பாக சில போட்டிகளில் தோனி போன்ற ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங் செய்து வியக்க வைத்தார் ராகுல்.
சஞ்சு சாம்சன் ஏமாற்றம்
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக ஏமாற்றம் அளித்த நிலையில், சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேன் ஆக டி20 போட்டிகளில் பயன்படுத்தப்பட்டார். அவர் பேட்டிங் சிறப்பாக இருந்தால் அவர் விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்று இருக்க வாய்ப்பு இருந்தது. எனினும், அவர் தனக்கு கிடைத்த இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கேப்டன் கோலி முடிவு
இதையடுத்து கேப்டன் விராட் கோலி, ராகுலை இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக ஆட வைக்க திட்டமிட்டு இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ராகுல் விக்கெட் கீப்பராக தொடர்ந்தார். விக்கெட் கீப்பிங் பணிச் சுமையை சமாளிக்க ஒருநாள் போட்டிகளில் அவர் மிடில் ஆர்டரில் ஆட வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து ஒருநாள் தொடர்
நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய அவர் 64 பந்துகளில் 88 ரன்கள் குவித்து அதிர வைத்தார். இனி அவர் ஒருநாள் போட்டிகளிலும் நிரந்தர விக்கெட் கீப்பர் ஆகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பீர் விமர்சனம்
இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணி வீரர் கௌதம் கம்பீர், கோலி முடிவு பற்றி தன் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ராகுலை டாப் ஆர்டரில் இருந்து நீக்கியது நல்ல யோசனை இல்லை என அவர் கூறி இருக்கிறார்.
அணியின் சொத்து
அவர் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். ஆனால், அவர் ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் அணியின் மதிப்புமிக்க சொத்து அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் கம்பீர்.
ஆகாஷ் சோப்ரா கருத்து
மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், ராகுல் 50 ஓவர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்து விட்டு பேட்டிங் செய்வது கூடுதல் பணிச் சுமை. அதனால், முக்கிய வீரரான அவருக்கு அதிகமாக காயங்கள் ஏற்படலாம் என எச்சரித்து இருக்கிறார்.