2020 டி20 உலகக்கோப்பை
இந்திய அணி 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இடம் பெற்று இருந்தார். மூத்த வீரர் தோனி அணியில் இடம் பெறாத நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வகையில் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
ரிஷப் பண்ட் சொதப்பல்
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்றார் பண்ட். டெஸ்ட் போட்டிகளில் அசத்தலாக ஆடிய அவர், குறைந்த ஓவர் போட்டிகளில் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. தவறான ஷாட்கள் அடிப்பது, விக்கெட் கீப்பிங்கில் சொதப்புவது என மோசமாக செயல்பட்டு வந்தார்.
பெரும் ஆதரவு
எனினும், பண்ட் திறமையானவர், அவருக்கு அதிகா வாய்ப்பு வழங்க வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் கருத்து கூறி வந்தனர். பிசிசிஐ தலைவர் கங்குலி, கூட ரிஷப் பண்ட் இன்னும் சில காலத்தில் தேறி விடுவார் என கருத்து தெரிவித்து இருந்தார்.
காயம் அடைந்த பண்ட்
இதன் இடையே சில வாரங்கள் முன்பு நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம் பெற்றார் ரிஷப் பண்ட். அந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் செய்த போது அவரது ஹெல்மட்டில் பந்து தாக்கியது. அதனால், அந்தப் போட்டியிலும், அடுத்த போட்டியிலும் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.
ராகுல் செயல்பாடு
அவருக்கு பதில் முதல் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார். அவர் சிறப்பாக செயல்பட்டதால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் பண்ட்டை அணியில் சேர்க்க வாய்ப்பு இருந்தும் கேப்டன் விராட் கோலி, ராகுலை விக்கெட் கீப்பராக செயல்பட வைத்தார்.
நியூசிலாந்து தொடர்
அதைத் தொடர்ந்து நியூசிலாந்து டி20 தொடரிலும் ராகுல் விக்கெட் கீப்பராக தொடர்கிறார். அணியில் ரிஷப் பண்ட் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார். ராகுல் தான் டி20 உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக செயல்படுவார். பண்ட் மீண்டும் அணியில் இடம் பெறுவது கடினமே என கூறப்படுகிறது.
விராட் கோலி பதில்
இந்த அதிரடி மாற்றம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசுகையில், 2003 உலகக்கோப்பை தொடரில் அப்போதைய கேப்டன் கங்குலி, ராகுல் டிராவிட்டை கூடுதல் பணியாக விக்கெட் கீப்பிங் செய்ய வைத்து, அதன் மூலம் அணியில் கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை ஆட வைத்தார். அதே முயற்சியை தான் தாங்களும் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
பேட்டிங் கடினம்
மேலும், கேஎல் ராகுல் துவக்க வீரர் என்பதால், சேஸிங் செய்யும் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பணியை முடித்து விட்டு அவரால் உடனடியாக துவக்க வீரராக முழு திறனுடன் பேட்டிங் செய்ய முடியாது எனவும் சில முன்னாள் வீரர்கள் கூறினர்.
தலைவர் பதில் என்ன?
இந்த நிலையில், கங்குலி இந்த விவகாரம் பற்றி பேசுகையில், விராட் கோலி தான் அந்த முடிவை எடுத்துள்ளார். ராகுல் நிலை குறித்து கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் முடிவு செய்யும். டி20 உலகக்கோப்பை தொடரில் தேர்வுக் குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கும் என்றார். முன்பு ரிஷப் பண்ட்டை ஆதரித்த கங்குலி, இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கிறார்.