ரோஹித் சர்மா, தவான்
ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அனுபவ துவக்க வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. முன்னதாக நடந்த டி20 தொடரில் ரோஹித் சர்மா மட்டும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதில் இந்தியா 5 - 0 என வெற்றி பெற்றது.
துவக்க வீரர்கள்
ரோஹித், தவான் இல்லாத நிலையில், கேஎல் ராகுல் துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை மிடில் ஆர்டருக்கு தள்ளி விட்ட கேப்டன் கோலி, மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா என இரண்டு அறிமுக வீரர்களை ஒருநாள் தொடரில் களமிறக்கினார். ப்ரித்வி ஷா ஓரளவு ரன் சேர்த்தாலும் அதிகபட்சமாக 40 ரன் தான் எடுத்தார். மயங்க் அகர்வால் இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
மோசமான வேகப் பந்துவீச்சு
அடுத்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு இந்த தொடரில் படுமோசமாக இருந்தது. முதல் போட்டியில் மட்டுமே ஷமி ஆடினார். ஒருபுறம் ஷர்துல் தாக்குர் ரன்னை வாரி இறைக்க, மறுபுறம் பும்ரா விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார். சுழற் பந்துவீச்சு தான் இரண்டாம் மற்றும் மூன்றாம் போட்டிகளில் அணியை ஓரளவு காப்பற்றியது. ஆனால், வெற்றிக்கு அது போதவில்லை.
பும்ரா நிலை
பும்ரா இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மூன்று போட்டிகளிலும் 10 ஓவர்கள முழுமையாக வீசிய அவர் 53, 64, 50 ரன்கள் கொடுத்து இருந்தார். முன்னதாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியிலும் அவர் விக்கெட் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாரி இறைத்த தாக்குர்
ஷர்துல் தாக்குர் மூன்று போட்டிகளிலும் ரன்களை வாரி இறைத்தார். இரண்டு போட்டிகளில் 80 மற்றும் 87 ரன்கள் கொடுத்து பெரும் அதிர்ச்சி அளித்தார். ஆனாலும், இவரை விடாமல் அணியில் வைத்திருந்தார் கேப்டன் கோலி. இது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஷமி எங்கே?
முதல் போட்டியில் ஆடிய ஷமி சுமாராகவே பந்து வீசினார். மூத்த வீரரான அவரை அடுத்த இரு போட்டிகளில் அணியில் தேர்வு செய்யவில்லை கேப்டன் கோலி. டெஸ்ட் தொடருக்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். பும்ரா, தடுமாறி வரும் நிலையில், மூத்த வீரரான ஷமியும் அணியில் இல்லாதது வைட்வாஷ் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம்.
கைவிட்ட கோலி
கேப்டன் கோலி, இந்த தொடரில் ஒரு அரைசதம் அடித்தார். ஆனால், மூன்று போட்டிகளில் மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் சராசரி 25 ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருநாள் தொடர் ஒன்றில் கோலியின் மோசமான செயல்பாடு இதுவாகும்.
ஆறாவது பந்துவீச்சாளர் எங்கே?
மூன்று போட்டிகளிலும் இந்திய அணி ஆறாவது பந்துவீச்சாளரை பயன்படுத்தவில்லை. சரியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். அதனால், நியூசிலாந்து வீரர்கள் குறி வைத்து குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களை தாக்கினர். கோலி ஏன் முதல் இரண்டு போட்டிகளில் ஆறாவது பந்துவீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டு இருந்த ஜாதவ்வை ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது?
தோனி, ரோஹித் உதவி இல்லை
கேப்டன் கோலி அணித் தேர்வில் பல சொதப்பல்களை செய்த நிலையில், தோனி மற்றும் ரோஹித் சர்மா அணியில் இல்லாதது தான் அதற்கு காரணம் என சிலர் கூறுவதையும் மறுக்க முடியவில்லை. கேப்டன் கோலியின் கேப்டன்சியில் இது ஒரு மோசமான தொடராக அமைந்து விட்டது என்பதை மறுப்பதற்கில்லை.