முதல் டெஸ்ட் போட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 348 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய இந்தியா 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 9 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஸ்விங் ஆன பந்துகள்
இந்தப் போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு. முதல் நாள் ஆட்டத்தில் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்திய நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்தும், அவுட் சைடு திசையில் பந்து வீசியும் இந்திய விக்கெட்களை சாய்த்தனர்.
ஷார்ட் பால் உத்தி
இரண்டாம் நாள் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஷார்ட் பால் உத்தியை கையாண்டனர். இந்திய வீரர்களால் ஷார்ட் பால்-களில் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. அதனால், அவுட் சைடு வந்த பந்தை அடிக்க ஆசைப்பட்டு தங்கள் விக்கெட்களை இழந்தனர்.
புஜாரா, கோலி வீழ்ச்சி
குறிப்பாக ஸ்ட்ரோக் அடிப்பதன் மூலம் ரன் சேர்க்கும் ப்ரித்வி ஷா, கோலி, புஜாரா ஆகியோர் இரண்டாம் இன்னிங்க்ஸில், ஷார்ட் பாலை அடிக்க முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு, ரன் எடுக்க முடியவில்லை என்ற நிலையில் பந்தை அடித்து தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
ப்ரித்வி ஷா நிலை
இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ப்ரித்வி ஷா 16 மற்றும் 14 ரன்களே எடுத்தார். அவருக்கு இது மூன்றாவது டெஸ்ட் போட்டி தான். ஆனால், அவரது மோசமான துவக்கம் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, அவரது பேட்டிங் நுணுக்கம் சரியில்லை என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி உள்ளனர். அவர் விரைவில் தன் பேட்டிங் உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கை விட்ட ஹனுமா விஹாரி
பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த ஹனுமா விஹாரி கூடுதல் ஆல் - ரவுண்டரை தவிர்த்து, அவரது பேட்டிங்கிற்காகவே அணியில் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் இந்திய அணி விக்கெட்களை இழந்து தவித்து வந்த போது, நீடித்து ஆடி ரன் குவிக்க தவறினார்.
கடைசி 3 விக்கெட்
நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது அந்த அணி ஒரு கட்டத்தில் 225 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. எனினும், கடைசி 3 விக்கெட்கள் விழும் முன் அந்த அணி 123 ரன்கள் சேர்த்து 348 ரன்கள் குவித்தது. இந்திய அணி 100 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து முன்னிலை பெறும் என கருதிய நிலையில், அதை முறியடித்து நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது.
கோலி செய்த தவறு
அப்போது கோலி வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி கடைசி 3 விக்கெட்களை விரைவாக வீழ்த்தாமல், இடையே அஸ்வினுக்கு ஓவர் அளித்தார். அதை பயன்படுத்தி ஜேமிசன் ரன் குவித்தார். அடுத்து அதிக ரன்கள் கொடுத்து வந்த ஷமிக்கும் தொடர்ந்து ஓவர் அளிக்க, அதை பயன்படுத்தி பவுல்ட் ரன் குவித்தார்.
நான்காவது வேகப் பந்துவீச்சாளர்
நியூசிலாந்து அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு பகுதி நேர வேகப் பந்துவீச்சாளரை பயன்படுத்தியது. சுழற் பந்துவீச்சாளர் இருந்தும் அவருக்கு மொத்தமே ஆறு ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தியது. நான்காவது வேகப் பந்துவீச்சாளர் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
பும்ரா, ஷமி ஏமாற்றம்
முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஷமி ஒர்யு ஓவருக்கு சராசரியாக 4 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இரண்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அளித்தது இந்திய அணியின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.