முதல் டி20 போட்டி
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆக்லாந்தில் துவங்கியது. அந்த மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
சிறிய பவுண்டரி எல்லை
ஆக்லாந்து மைதானம் சிறிய பவுண்டரி எல்லைகள் கொண்ட மைதானம் என்பதோடு, எந்த பகுதிகளில் எளிதாக சிக்ஸ், ஃபோர் அடிக்கலாம் என்பதையும் அறிந்து வைத்திருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடித்தனர்.
அதிரடி ஆட்டம்
துவக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் 30, கோலின் மன்றோ 59 ரன்கள் குவித்தனர். கிராண்ட்ஹோம் டக் அவுட் ஆனார். கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் அதிரடி ஆட்டம் ஆடினர். இருவரும் சிக்ஸ், ஃபோர் என இந்திய பந்துவீச்சின் மீது தாக்குதல் நடத்தினர்.
பும்ரா, ஷமி அசத்தல்
17 ஓவர்களில் 178 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அடுத்த மூன்று ஓவர்களில் எப்படியும் 220 ரன்கள் வரை அந்த அணி குவிக்க முயலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் பும்ரா, ஷமி அசத்தலாக வீசினர்.
மூன்று அரைசதம்
இதையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் மன்றோ 59, கேன் வில்லியம்சன் 51, ராஸ் டெய்லர் 54 என மூன்று வீரர்கள் அரைசதம் கடந்தனர். அடுத்து இந்திய அணி 204 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத் துவங்கியது.
ரோஹித் சர்மா ஏமாற்றம்
ரோஹித் சர்மா ஒரு சிக்ஸ் அடித்த நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ராகுல், கோலி இணைந்து அசத்தலாக ஆடினர். இருவரும் இந்திய அணியின் ரன் ரேட் 10க்கும் கீழ் செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர்.
ராகுல், கோலி அவுட்
ராகுல் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கோலி 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், திடீர் சறுக்கல் ஏற்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். சிவம் துபே 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி
பின் மனிஷ் பாண்டேவுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டம் ஆடி சிக்ஸ், ஃபோர் என தெறிக்கவிட்டார். அவர் 29 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 19 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
இந்தியா வெற்றி
முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு பந்துகள் மீதமிருந்த நிலையில், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்ஸ்மேன்களின் போட்டியாக நடந்த இந்த மோதலில், இரண்டு அணிகளின் பந்துவீச்சாளர்கள் நிலை தான் பரிதாபமாக இருந்தது.
இந்திய அணியின் நம்பிக்கை
பொதுவாக இந்திய அணி மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை மட்டுமே சார்ந்து இருந்த நிலையில், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து சவாலான இலக்கை எட்டச் செய்தது இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.