ரோஹித் கேப்டன்
கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்ட நிலையில், ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். போட்டி நடந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் வரை எளிதாக குவிக்கலாம் என கருதப்பட்டது.
இந்தியா பேட்டிங்
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் சுமாரான துவக்கம் அளித்தார். அவர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ராகுல் 45 ரன்கள் குவித்தார். மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா சிறப்பாக ரன் குவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்கள் குவித்தார்.
ரோஹித் சர்மா அதிரடி
ரோஹித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அவரது அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்த நிலையில், அவர் சென்ற பின் ஸ்ரேயாஸ் ஐயரால் எளிதாக பவுண்டரி அடிக்க முடியவில்லை.
இந்தியா ஸ்கோர்
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. போட்டி நடந்த பே ஓவல் ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் குறைவானதாகவே பார்க்கப்பட்டது. இந்திய அணியால் இந்தப் போட்டியில் வெல்வது கடினம் என்றே கருதப்பட்டது.
கேப்டன் யார்?
ரோஹித் சர்மா பேட்டிங் செய்த போது காயம் அடைந்ததால் அவரால் இந்திய அணி பீல்டிங் செய்த போது களத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், பந்து வீச்சின் போது இந்திய அணியை வழி நடத்த கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
நியூசிலாந்து பேட்டிங்
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி சேஸிங் செய்யத் துவங்கியது. துவக்க வீரர்கள் கப்தில் 2 ரன்கள் எடுத்தும், மன்றோ 15 ரன்கள் எடுத்தும், டாம் ப்ரூஸ் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். அடுத்து வந்த செய்பர்ட் மற்றும் ராஸ் டெய்லர் அதிரடியாக ஆடினர்.
ஒரே ஓவரில் 34 ரன்கள்
இருவரும் சிவம் துபே வீசிய 10வது ஓவரில் 34 ரன்கள் குவித்து மிரட்டினர். அதுவரை இந்திய அணிக்கு சாதகமாக இருந்த போட்டி, நியூசிலாந்து அணி பக்கம் சாய்ந்தது. இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.
பந்துவீச்சாளர் மாற்றம்
அந்த மோசமான ஓவருக்கு பின் தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல், சாஹல், பும்ரா, சைனி என பந்துவீச்சாளர்களை மாற்றிக் கொண்டே வந்தார். அது பெரிய அளவில் பயன் தந்தது. சைனி வீசிய 13வது ஓவரில் அரைசதம் கடந்த நிலையில் செய்பர்ட் ஆட்டமிழந்தார்.
சரிந்த விக்கெட்கள்
அடுத்து 14வது ஓவரில் பும்ரா, டேரில் மிட்செல் விக்கெட்டை வீழ்த்தினார். 17வது ஓவரில் தாக்குர் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்கள் விழ, நியூசிலாந்து அணி பரிதாப நிலையை அடைந்தது. 18வது ஓவரில் ராஸ் டெய்லரும் அவுட் ஆனார். அத்துடன் 8 விக்கெட்களை இழந்து தோல்வியை நோக்கி சென்றது நியூசிலாந்து.
பும்ரா அபாரம்
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்கள் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா இந்தப் போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இந்தியா வெற்றி
இந்தியா டி20 தொடரை ஏற்கனவே வென்ற நிலையில், தொடரின் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை வைட்வாஷ் செய்தது. அதிலும் குறிப்பாக ஐந்தாவது போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் எளிய சேஸிங்கை கட்டுப்படுத்தி இளம் இந்திய வீரர்கள் வென்றது சிறப்பாக அமைந்தது.