அதே மைதானம்
முதல் டி20 போட்டி நடந்த அதே ஆக்லாந்து மைதானத்தில் தான் இரண்டாவது டி20 போட்டியும் நடைபெற்றது. அந்த மைதானத்தில் முதல் போட்டியில் இரு அணிகளும் 200 ரன்களை கடந்து இருந்ததால், இரண்டாவது போட்டியிலும் இரு அணிகளும் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது.
மார்ட்டின் கப்தில் அதிரடி
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. அந்த அணி துவக்கத்தில் அதிரடி ஆட்டம் ஆடியது. துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 20 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
விக்கெட் வீழ்ச்சி
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதான ஆட்டம் ஆடி வந்தார். மற்றொரு துவக்க வீரர் மன்றோ 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கிராண்ட்ஹோம் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் மின்னல் வேக ஆட்டம் ஆடிய வில்லியம்சன், இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராஸ் டெய்லர் நிதானம்
அதே போல, முதல் போட்டியில் அதிரடி அரைசதம் கடந்த ராஸ் டெய்லர் 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். செய்பர்ட் மட்டுமே கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆட முயன்றார். அவர் 26 பந்துகளில் 33 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.
நியூசிலாந்து எடுத்த ரன்கள்
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்து இருந்தது. கையில் 4 விக்கெட்கள் இருந்த போதும் 13வது ஓவர் முதல் 20வது ஓவர் வரை ராஸ் டெய்லர் நிதான ஆட்டம் ஆடியது அதிர்ச்சியை அளித்தது.
பந்துவீச்சு
இந்திய அணியின் பந்துவீச்சு தரமாக இருந்ததால் தான் நியூசிலாந்து அணி ரன் குவிக்க திணறியது. இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய ஷமி 22 ரன்கள், பும்ரா 21 ரன்கள், ஜடேஜா 18 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினர். ஜடேஜா 2, துபே 1, தாக்குர் 1, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.
ரோஹித், கோலி அவுட்
133 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை அதிர்ச்சி அளித்தார் ரோஹித் சர்மா. அவர் முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்து அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 11 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
ரன் குவித்த ஜோடி
அடுத்து துவக்க வீரர் ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். அவர்கள் இருவரும் விக்கெட் விழாமல் மிக நிதானமாக ஆடினர். ஸ்ரேயாஸ் ஐயர் பீல்டிங் செய்த போது காலில் ஏற்பட்ட காயத்துடன் ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்
ராகுல் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். பொறுப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 44 ரன்கள் குவித்து வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறி கொடுத்தார். பின், ராகுலுடன் இணைந்த சிவம் துபே சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார்.
இந்தியா வெற்றி
இந்திய அணி 17.3 ஓவர்களிலேயே 135 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 - 0 என முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றாலும் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.