நியூசிலாந்து தொடர் வெற்றி
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு தொடரை 5 - 0 என கைப்பற்றியது. ஆனாலும், அந்த தொடரில் இந்திய அணியின் பீல்டிங் மோசமான நிலையில் தான் இருந்தது. எனினும், தொடரில் இந்தியா வென்றதால் அது விமர்சிக்கப்படவில்லை.
பீல்டிங் சொதப்பல்
இந்திய அணி, நியூசிலாந்து தொடருக்கு முன்பு இருந்தே பீல்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்பது தான் உண்மை. இந்தியாவில் நடை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்தே இந்திய அணியின் பீல்டிங் மோசமான நிலையில் உள்ளது.
டி20 தொடர்
நியூசிலாந்து டி20 தொடரில் கேப்டன் கோலி கூட ஒரு எளிய கேட்ச்சை கோட்டை விட்டு அதிர்ச்சி அளித்தார். மற்ற வீரர்களும் கேட்ச்களை விடுவதும், பந்தை தவற விடுவதுமாக சொதப்பினர். அதே சமயம், சில சிறப்பான ரன் அவுட்கள், அரிய கேட்ச்கள் என இந்திய அணி சில தருணங்களில் ஆச்சரியம் அளித்து சமாளித்தது.
ஒருநாள் போட்டி
இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்தியா விக்கெட் வீழ்த்த திணறியது. நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் அந்தப் போட்டியில் சதம் அடித்தார்.
குல்தீப் நழுவ விட்ட கேட்ச்
அவர் 10 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த எளிதான கேட்ச்சை குல்தீப் யாதவ் தவற விட்டு அதிர்ச்சி அளித்தார். அது அந்தப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ராஸ் டெய்லர் அதன் பின் சதம் அடித்து நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
மனிஷ் பாண்டே ஓவர்த்ரோ
அதே போட்டியில், மனிஷ் பாண்டே ஒரு முக்கிய கட்டத்தில் ரன் அவுட் செய்ய முயற்சி செய்தார். ஆனால், பந்து ஓவர் த்ரோ ஆகி நியூசிலாந்து அணிக்கு எளிதாக ஒரு பவுண்டரி கிடைத்தது. அதே சமயம், கோலி இரண்டு ரன் அவுட்கள் செய்து மிரட்டினார்.
இடைவிடாத போட்டிகள்
இந்திய அணியின் இந்த மோசமான பீல்டிங் செயல்பாடுகளுக்கு காரணம் தொடர்ந்து நடந்து வரும் கிரிக்கெட் தொடர்கள் தான் என கூறப்படுகிறது. இடை விடாத போட்டிகளால் வீரர்கள் சோர்ந்து போய் உள்ளனர். மேலும், வீரர்கள் சரியான பீல்டிங் பயிற்சியும் செய்யவில்லை.
ஒருமுறை மட்டுமே பயிற்சி
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் முடிந்து நேராக நியூசிலாந்து கிளம்பி வந்த இந்திய வீரர்கள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது ஒரே ஒரு முறை மட்டுமே பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். குறைந்த அளவிலான பயிற்சிக்கு காரணமும், இடைவிடாத போட்டிகள் தான் காரணம் என கூறப்படுகிறது.
விராட் கோலி நம்பிக்கை
கேப்டன் விராட் கோலி பீல்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார். ஜடேஜா வழக்கம் போல மிரட்டுகிறார். எனினும், மற்ற வீரர்கள் நல்ல பீல்டர்கள் என்றாலும், போட்டியின் முக்கிய தருணங்களில் சொதப்பி வருகின்றனர். அடுத்த இரு போட்டிகளில் இந்திய வீரர்கள் சுதாரிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி 0 - 1 என தொடரில் பின்தங்கி உள்ளது. அடுத்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.